ஆயுர்வேத மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்ய அனுமதி.. உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய மருத்துவர்கள் சங்கம்
டெல்லி: ஆயுர்வேத மருத்துவர்களும் சில குறிப்பிட்ட அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் அலோபதி, ஆயுர்வேதம், சித்தா என பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முறைகளைப் பின்பற்றி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவர் பார்த்து வந்தனர். இருப்பினும், அலோபதி மருத்துவர்களுக்கு மட்டுமே இதுவரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
மற்ற மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை. இந்நிலையில், ஆயுர்வேத மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் குடலிறக்கம், கண்புரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.

உண்ணாவிரதப் போராட்டம்
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு அப்போதே இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று தொடங்கினர். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான உத்தரவு
மேலும், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைப் பெண் மருத்துவர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளனர். அறிவியல் ரீதியாகப் பொருந்தாத இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் செல்வர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த உத்தரவு பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மற்ற சங்கங்களும் ஆதரவு
இந்திய மருத்துவ சங்கத்தினரின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல மருத்துவர்கள் சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. அதேபோல பல் மருத்துவர்கள் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் மருத்துவ மாணவர் அமைப்பு, ஜூனியர் டாக்டர்கள் நெட்வொர்க் , ஐ.எம்.ஏ மகளிர் பிரிவு, ஐ.எம்.ஏ மருத்துவமனை வாரியம், மருத்துவக் கல்லூரிகள் ஆகியோரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications