ஆகஸ்ட் 17ல் நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக்.. கொல்கத்தா கொடூரத்துக்கு நீதி கோரி IMA போராட்டம்!
டெல்லி: வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் மருத்துவர்கள் பணி செய்ய மாட்டார்கள் என இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய சேவை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது மருத்துவர்கள் சங்கம்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9 ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும், மருத்துவர்களும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற பல மாநிலங்களும், தெலுங்கானாவில் உள்ள சில மருத்துவர்கள் சங்கங்களும் அனைத்து சேவைகளையும் முற்றிலுமாக மூடுவதாக தெரிவித்தன. பல இடங்களில் மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மருத்துவரின் மரணத்திற்கு நீதி கோரி கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் 14 ஆம் தேதி இரவு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி நிறைவடைந்த பிறகு நள்ளிரவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள், மருத்துவமனையை சூறையாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூர சம்பத்தைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நாடு முழுவதும் மருத்துவர்களின் சேவைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கும். அத்தியாவசிய சேவைகள் மட்டும் தொடரும், மேலும் எமர்ஜென்சி கேஸ்கள் கவனிக்கப்படும், மற்ற அனைத்து சேவைகளையும் மருத்துவர்கள் புறக்கணிப்பார்கள் என அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றச் சம்பவம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது. நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications