கொரோனா உச்சத்தில்.. பக்ரீத்துக்காக தளர்வுகள் அளிப்பதா?..கேரளாவுக்கு, இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்!
டெல்லி: கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வுகளை திரும்ப பெறுமாறு கேரள அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தினமும் சராசரியாக 12,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ஒரு சில நாட்களில் தினசரி பாதிப்பு 15,000-ஐயும் கடந்து செல்கிறது.

ஏகப்பட்ட தளர்வுகள்
நிலைமை இப்படி இருக்க வருகிற புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் வரை ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கேரள அரசு நேற்று அறிவித்து இருந்தது. அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர ஆடைகள், காலணிகள், மின்னணு பொருட்கள், நகைகளை விற்கும் கடைகள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இது நியாயம் தானா?
வழிபாட்டுத் தலங்களில் 40 பேர் வரை தரிசிக்கலாம் என்று கூறியது அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது தவிர திரைப்பட படப்பிடிப்பையும் நடத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியும் அரசு வழங்கியது. கேரளாவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் பண்டிகையை காரணம் காட்டி தளர்வுகளை அறிவிப்பது நியாயம் தானா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினார்கள்.

இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்
இந்த நிலையில் கேரளாவில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் கூறுகையில், ' ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பல வட மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டபோதிலும் , பொது பாதுகாப்பு என்ற ஆக்கபூர்வமான உணர்வோடு பாரம்பரிய மற்றும் பிரபலமான மத ஊர்வலங்கள், விழாக்களுக்கு தடை விதித்துள்ளது.
Recommended Video

வாபஸ் பெறுங்கள்
ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பண்டிகைக்காக தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கேரள அரசின் இந்த முடிவால் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். கற்றறிந்த கேரள மாநிலம் இந்த பிற்போக்கு முடிவுகளை எடுத்தது துரதிர்ஷ்டவசமானது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு உடனடியாக கேரள அரசு தளர்வுகளை திரும்ப பெற வேண்டும். அப்படி திரும்ப பெறாவிட்டால் அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications