‛அவுரங்கசீப்புக்கு பதில் அப்துல்கலாம்’.. டெல்லியில் முக்கிய தெருவின் பெயர் அதிரடி மாற்றம்
டெல்லி: டெல்லியில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப்பின் தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அந்த தெருவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் முகாலய மன்னர்களின் பெயர்களில் சாலைகள், தெருக்கள் உள்ளன. இதன் பெயர்கள் சமீபகாலமாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லியில் பல்வேறு இடங்களுக்கான பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றம் செய்தது. முகல் தோட்டத்தின் பெயர் ‛அம்ரித் உத்யன்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தற்போது இன்னொரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி டெல்லி லுட்யென்ஸில் உள்ள அவுரங்கசீப் தெருவின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாம் சாலையையும், பிரித்வி ராஜ் சாலையையும் இணைக்கும் வகையில் இந்த தெரு உள்ள நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவுரங்கசீப் தெருவுக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் காலமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்டிஎம்சி உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இதுபற்றி டெல்லி என்டிஎம்சி துணை தலைவர் சதீஷ் உபாத்யாயா கூறுகையில், ‛‛அவுரங்கசீப் லேனின் பெயரை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் லேன் என்று மாற்றுவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
முன்னதாக கடந்த 2015ல் டெல்லியில் அவுரங்கசீப் பெயரில் சாலை இருந்தது. இந்த சாலைக்கு ஏபிஜே அப்துல் கலாமின் பெயரை டெல்லி மாநகராட்சி சூட்டியது. இதற்கு அப்போது முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்தன. உள்நோக்கத்துடன் பெயர் மாற்ற நடவடிக்கைகள் இருப்பதாக விமர்சித்து இருந்தன. இந்நிலையில் தான் தற்போது அவுரங்கசீட் பெயரில் இருந்த தெருவுக்கு ஏபிஜே அப்துல் கலாம் பெயர் சூப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications