இந்தியாவில் கார் வைத்துள்ள குடும்பம் 8 சதவீதம் மட்டுமே.. பின்தங்கிய தமிழகம்.. சர்வே கூறுவது என்ன?
டெல்லி: இந்தியாவில் உள்ள குடும்பங்களில் வெறும் 8 சதவீதத்தினர் மட்டுமே சொந்தமாக கார் வைத்துள்ளனர் என்பது மத்திய அரசின் ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் எத்தனை சதவீத மக்களிடம் சொந்தமாக கார் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களாக உள்ள மும்பை, பெங்களூர், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா உள்பட பல்வேறு இந்திய நகரங்களில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதை நாம் பார்த்து இருக்கலாம் அல்லது கேள்விப்பட்டு இருக்கலாம்.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
இதற்கு அதிகமான கார் பயன்பாடு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால் இந்தியாவில் 8 சதவீத குடும்பத்தினர் மட்டுமே சொந்தமாக கார் வைத்துள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும்.
8 சதவீத குடும்பத்தில் கார்
இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தேசிய குடும்ப சுகாதார சர்வே-5(NFHS) மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 6,64,972 குடும்பங்களை அடிப்படையாக கொண்டு சர்வே எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இந்திய குடும்பங்களில் சுமார் 8 சதவீதத்தின் மட்டுமே கார் வைத்துள்ளனர். அதன்படி பார்த்தால் 12 குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாக கார் உள்ளது. பெரும்பான்மையான இந்தியர்கள் இன்னும் இருசக்கர வாகனங்களை தான் வைத்துள்ளனர். ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களை 54 சதவீத குடும்பத்தினர் வைத்துள்ளனர். அதேசமயம் இந்திய குடும்பங்களில் 55 சதவீதத்தினரிடம் சைக்கிள் மட்டுமே உள்ளது.
20 சதவீதத்தினருக்கு வசதியில்லை
மேலும் வளர்ப்பு பிராணிகள் மூலம் இயங்கும் வண்டிகளை 3.7 சதவீதம் பேர் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் சுமார் 20 சதவீத குடும்பம் போக்குவரத்துக்கான எந்த வசதியையும் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் கார் வைத்திருப்பவர்களை பணக்காரர்கள் என்றோ, வசதியாக வாழ்கிறார்கள் என்றோ நினைக்க வேண்டாம். ஏனென்றால் குறைந்த வருமானம் கொண்ட சிலர் கூட சொந்தமான கார் வைத்துள்ளனர்.
கார் பயன்பாடு அதிகரித்தது எப்போது?
இந்தியாவில் 1998-99ல் கார் வைத்திருப்போர் எண்ணிக்கை 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது இது 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1990களுக்கு முன்பு இந்தியாவில் கார் வைத்திருப்பது என்பது கடினமான ஒன்றாகும். இதற்கு பணவசதி, ஆட்டோமொபைல் துறைக்கான சேவை குறைபாடு உள்ளிட்டவற்றை காரணமாக கூறலாம். ஆனால் 1990களில் பொருளாதார சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கார் பயன்பாடு என்பது எளிதாக மாறியது. நாட்டில் கார் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க துவங்கியது.
முதல்-இரண்டாவது சர்வேயில் எவ்வளவு?
அதன்படி முதன் முதலாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தேசிய குடும்ப சுகாதார சர்வே ஒன்று, 1992-93ல் நடத்தப்பட்டது. இதில் ஒரு சதவீத குடும்பங்கள் மட்டுமே கார்களை வைத்திருந்தன. அப்போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் 8 சதவீத குடும்பத்தினரும், 42 சதவீதத்தினர் சைக்கிளும் வைத்திருந்தனர். 1998-99ல் இரண்டாவது முறையாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 1.6 சதவீத குடும்பத்தினர் கார்களை பயன்படுத்தி வந்தனர். ஏறக்குறைய 47.8 சதவீதம் பேர் சைக்கிள்கள் வைத்திருந்தனர். 11 சதவீத இந்திய குடும்பங்கள் மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் வைத்திருந்தனர்
மூன்றாவது -நான்காவது சர்வே முடிவு
3வது சர்வேயானது 2005-06ல் மேற்கொள்ளப்பட்டது. இதில் சைக்கிள் உரிமையாளர்களின் எண்ணிக்கை 56.5 சதவீதமாகவும், கார் உரிமையாளர்களின் எண்ணிக்கை 2.8 சதவீதமாகவும் இருந்தது. மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் வைத்திருப்போர் எண்ணிக்கை 19 சதவீதமாகவும் இருந்தது. 4வது சர்வேயானது 2015-16ல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கார் வைத்திருக்கும் குடும்பத்தினரின் எண்ணிக்கை 6 சதவீத குடும்பத்திலும் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது 5வது ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. அதன்படி சைக்கிள் வைத்திருக்கும் குடும்பங்களின் சதவீதம் 55 சதவீதமாகவும், மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் குடும்பத்தின் எண்ணிக்கை 54 சதவீதமாகவும், கார் வைத்திருக்கும் குடும்பத்தின் எண்ணிக்கை 8 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் கார் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகரங்களில் அதிகரிப்பு
இந்த ஆய்வின்படி ஆய்வின்படி நகரங்களில் கார் வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி நகரங்களில் 14 சதவீத குடும்பத்தினர் கார்களை வைத்துள்ளனர். இது கிராமப்புறங்களில் வெறும் 4 சதவீதமாக தான் உள்ளது. அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு செல்ல கார்களை பயன்படுத்துகின்றனர். 17 சதவீதம் பேர் மோட்டார் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். 11 சதவீதம் பேர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பது தெரியவந்துள்ளது.
மாநிலங்களில் வித்தியாசம்
தற்போதைய ஆய்வு முடிவில் மாநிலங்களுக்கு மாநிலம் கார் பயன்பாட்டின் எண்ணிக்கை மாறுபடுகிறது. கோவா மற்றும் கேரளாவில் கார் வைத்திருக்கும் குடும்பங்களின் சதவீதம் அதிகமாக உள்ளது. கோவாவில் இரண்டு குடும்பங்களில் ஒருவர் (46 சதவீதம்) கார்களை வைத்துள்ளனர். அதேசமயம் கேரளாவில் நான்கில் ஒருவர் (26 சதவீதம்) கார் வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நான்கு குடும்பங்களில் ஒரு குடும்பம் (24 சதவீதம்), ஹிமாச்சல பிரதேசத்தில் 23.5 சதவீத குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர். பஞ்சாபில் சுமார் 23 சதவீத குடும்பங்கள், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் டெல்லியில் குறைந்தது ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் கார்( 20 சதவீதம்) உள்ளது.
குறைவாக கார் உள்ள மாநிலங்கள்
பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் கார் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பீகாரில் 2 சதவீத குடும்பங்கள் மட்டுமே கார் வைத்துள்ளனர். அதேசமயம் ஆந்திராவில் 2.7 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 2.8 சதவீதமாகவும் கார் வைத்துள்ள குடும்பங்கள் உள்ளன. மேற்கு வங்காளத்தில் சைக்கிள் தான் அதிகமாக உள்ளது. 83 சதவீத குடும்பங்களில் சைக்கிள் உள்ளது. இது பீகாரில் 69 சதவீதமாகவும், ஆந்திராவில் சுமார் 34 சதவீதமாகும் குறைந்துள்ளது. இருப்பினும் இங்குள்ள குடும்பங்களில் 52 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் எவ்வளவு?
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நகர்புறங்களில் 10 சதவீத குடும்பமும், கிராமப்புறங்களில் 3 சதவீத குடும்பமும் கார் வைத்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் அதிக கார் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியிலில் 24வது இடத்தில் தமிழகம் உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் 49 சதவீத குடும்பத்தில் சைக்கிள் உள்ளது.
பிற நாடுகளை விட இந்தியாவில் குறைவு
பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கார்கள் மீதான நாட்டம் குறைவாக உள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛2018ல் ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்தில் 500 பேரில் 22 பேருக்கு கார் வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் 1000 பேரில் 22 பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். இதற்கு இந்தியர்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். உலக வங்கியின் தரவுகளின்படி ஒரு இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம் 2,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது, அதே சமயம் ஒரு காரின் குறைந்தபட்ச விலை என்பது உதாரணமாக மாருதி ஆல்டோ போன்ற ஒரு ஹேட்ச்பேக்கின் விலை 5.000 முதல் 6,000 அமெரிக்க டாலர் வரை உள்ளது. இதுதவிர பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான செலவு உள்ளது. இது இருசக்கர வாகனங்களை ஒப்பிடும்போது கார்களுக்கு அதிகமாக செலவாகும். இதனால் கார் பயன்பாடு இந்தியாவில் குறைந்துள்ளது'' என்றார்.
நெரிசல் மிகுந்த 4 நகரங்கள்
இப்படி கார் பயன்பாடு குறைந்து இருந்தாலும் கூட 2020ம் ஆண்டில் டாம் டாம் போக்குவரத்து அட்டவணைப்படி உலகின் 21 நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி, பெங்களூர், மும்பை உள்பட நான்கு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. 58 நாடுகளில் உள்ள 404 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த முடிவுகள் வெளியானது. இதற்கு நகரங்களில் திட்டமிடப்படாத உள்கட்டமைப்பே காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில்காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த...
பருவநிலை மாற்றம் தொடர்பான 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் 2005 ஆம் ஆண்டை விட 32-35 சதவிகிதம் காற்று மாசுபாட்டு வாயு உமிழ்வை குறைக்க இந்தியா உறுதியளித்தது. கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த UNFCCCயின் 26வது கட்சிகளின் மாநாட்டில் 2070க்குள் பூஜ்ஜிய காற்று மாசுபாடு உமிழ்வுக்கு முயற்சிக்கப்படும் என உறுதி செய்தது. ஆனால் இதற்கு தற்போது வரை அதற்கான நடவடிக்கை நாட்டில் மந்தமாக தான் உள்ளது.
சைக்கிலிஸ்ட் வாய்ப்பு வேண்டும்
இதுபற்றி TERI போக்குவரத்து மற்றம் நகர்புற நிர்வாக தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ஷெரீப் கமர், கூறுகையில், ‛‛இந்தியாவில் சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்பாலங்கள் கட்டுதல், புது சாலைகள் அமைத்தல் ஆகியவை அனைத்தும் கார் உரிமையாளர்களே கருத்தில் கொண்டு தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல வழிகளில் நன்மை அளிக்கும் சைக்லிஸ்டுகளுக்கான உள்கட்டமைப்பு வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது இல்லை. வரும்காலத்தில் இதனை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.