ஜூலை 28 செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கம்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
டெல்லி: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் ஜூலை 28ல் துவங்க உள்ள நிலையில் சென்னை உள்பட அன்றைய தினம் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.
இதுவரை 43 முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்திருந்தாலும் கூட அதில் ஒன்று கூட இந்தியாவில் நடைபெறவில்லை. இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் எங்கே? மனசு இல்லைனா ஏன் கூப்பிடுறீங்க?- வெடிக்கும் சர்ச்சை
ஜூலை 28 முதல் துவக்கம்
இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கின்றன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால் அதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏறக்குறைய பணிகள் முடிவடையும் நிலையை அடைந்துள்ளன.
படையெடுக்கும் வீரர்கள்
மொத்தம் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். வீரர்கள் இன்று முதல் வருகை தர துவங்கி உள்ளனர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏஆர் ரஹ்மான் இசையில் வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடித்துள்ளார். தற்போது இந்த பாடலுக்கு இணையதளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
துவக்க விழாவில் பங்கேற்பு
பிரமாண்டமான இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28 ல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் அழைப்பு விடுத்தனர். அவரும் விழாவில் பங்கேற்க உள்ளார்.
4 மாவட்டங்களில் விடுமுறை
இதனால் அனைவரின் பார்வையும் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. ஜூலை 28 ல் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் தான் ஜூலை 28 ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.