சொத்து வரியில் மேஜர் மாற்றம்.. மத்திய அரசு கொண்டு வந்த "புதிய வருமான வரி மசோதா!" ஏன் முக்கியம்?
டெல்லி: கடந்த 1961ல் கொண்டு வரப்பட்ட வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு எளிமையான புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் நேற்று பிற்பகல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பீகாரில் சார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் விவாதம் இல்லாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் ஒவ்வொரு பட்ஜெட் சமயத்திலும் மிடில் கிளாஸ் மக்கள் வருமான வரி குறித்து எதாவது அறிவிப்பு உள்ளதா என்பதையே ஆர்வமாகப் பார்ப்பார்கள். மேலும், சம்பளதாரர்கள் அனைவரும் வருமான வரியையும் தாக்கல் செய்வது கட்டாயமாகும். இருப்பினும், வருமான வரி தாக்கல் செய்வது சிக்கலாக இருப்பதாக நீண்ட காலமாகவே மக்கள் சொல்லி வந்தனர்.

வருமான வரிச் சட்டம்
இந்தச் சூழலில் தான் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய எளிமையான வருமான வரிச் சட்டத்தை மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதை நிர்மலா சீதாராமன் "S.I.M.P.L.E" அதாவது 'Streamlined structure and language; Integrated and concise; Minimised litigation; Practical and transparent; Learn and adapt, and Efficient tax reforms' எனக் குறிப்பிட்டார். இருப்பினும், அதில் சில திருப்பங்களை எம்பிகள் கோரினர்.
இதனால் அந்த வரைவு, ஆளும் பாஜகவின் பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அக்குழு 285 பரிந்துரைகளை வழங்கியது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். திருத்தப்பட்ட இந்த புதிய மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய வரைவு வருமான வரி அமைப்பை மேலும் எளிதாக்குகிறது என்றும் தனிநபர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்க இது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைஜெயந்த் பாண்டா
முன்னதாக தேர்வுக் குழுத் தலைவரான பைஜெயந்த் பாண்டா இது தொடர்பாகக் கூறுகையில், "1961ல் வருமான வரிச் சட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சொற்கள் உள்ளன. இது மிகவும் சிக்கலானது. புதிய மசோதா அதைக் கிட்டத்தட்ட 50% குறைத்து எளிதாக்குகிறது" என என்றார். புதிய வருமான வரி மசோதாவானது, சட்டங்களை எளிமைப்படுத்துவது மட்டுமின்றி, வரி விலக்குகளைத் தெளிவுபடுத்துகிறது.
புதிய வரைவில் முன்மொழியப்பட்டுள்ள சில மாற்றங்கள்
- வரித் திரும்பப் பெறுவதில் மாற்றம் - தாமதமாகத் தாக்கலானாலும் வரி செலுத்துவோர் ரீபண்ட் பெற உரிமை கோரலாம்.
- டி.டி.எஸ் (TDS) தாமதமாகத் தாக்கல் செய்வதற்கு அபராதம் இல்லை - டி.டி.எஸ் தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படாது.
- பூஜ்ய-டி.டி.எஸ் சான்றிதழ் - வரிச் சுமைகள் இல்லாத, அதாவது வருமான வரி செலுத்தாதவர்கள், முன்கூட்டியே 'பூஜ்ய சான்றிதழ்களை' கோரலாம். இது இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என இருவருக்கும் பொருந்தும்.
- இன்டர் கார்ப்பரேட் டிவிடண்ட்- ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளிலிருந்து பெறும் டிவிடண்டுகளுக்கு விலக்கு தரப்படும். பிரிவு 80எம் இன் கீழ் இந்த விலக்கு தரப்படுகிறது. புதிய வருமான வரிச் சட்டத்தின் முதல் வரைவில் இந்த விதிமுறை நீக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இந்த வரி விலக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
சொத்து வரி
பழைய விதியில் வீடு உள்ளிட்ட சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு standard deduction தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த புதிய விதிகளில் பிரிவு 21இன் standard deduction3 0%ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை வாங்க, கட்ட, பழுதுபார்க்கப் போன்றவற்றுக்குக் கடன் வாங்கிய மூலதனத்தின் மீதான வட்டியும் இதில் கழிக்கப்படும்.












Click it and Unblock the Notifications