வீடு வீடாக "நுழைந்த" மோடியின் ஆசை.. தேசிய கொடியேற்றி செல்பி அனுப்புங்க: மாணவர்களுக்கு யுஜிசி அட்வைஸ்
டெல்லி: வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலுமே சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியிருக்கிறது..

சுதந்திர தினத்தையொட்டி, அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். எனவே, சுதந்திர தின பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அமித்ஷா: முன்னதாக, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்திருந்தார்.. அத்துடன், தன்னுடைய எக்ஸ் தளம், இன்ஸ்டா, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களிலும், முகப்பு படத்தை மாற்றி, தேசிய கொடியை டிபியாக வைத்திருக்கிறார்.
அதுபோலவே, பிரதமர் மோடியும், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உள்ள தனது முகப்புப் படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்துள்ளார்... மேலும், ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார்.
செல்பிகள்: அதில், "ஹர் கர் திரங்கா" என்பதை மறக்க முடியாத மக்களுக்கான இயக்கமாக மீண்டும் மாற்றுவோம். நான் என்னடைய முகப்புப் படத்தை மாற்றுகிறேன். இதன் மூலம் நமது தேசியக் கொடியை கொண்டாடுவதில் என்னுடன் அனைவரும் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் செல்ஃபிக்களை https://harghartiranga.com -ல் பகிர வேண்டும்.
ஹர் கர் திரங்கா - என்பது அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி என்பதாகும். ஆசாதி கா அம்ரித் மாஹோத்சவ் - என்பது சுதந்திரத்தின் ஆற்றல் அமுதம் என்பாகும்.
ஹர் கர் திரங்கா: இந்திய மக்கள் நமது தேசியக் கொடியை அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 78 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூர்வதற்காக ஊக்குவிப்பதற்கான பிரச்சாரமாகும். அதனால், இந்த வருடமும் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்" என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.
அதாவது, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்பதற்குதான் 'ஹர் கர் திரங்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பிரச்சாரம்: "இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக "ஹர் கர் திரங்கா" என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது.
இந்த பிரச்சாரம் குறித்த தகவல்களை உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பரப்பி, 13-ம் தேதி முதல்15-ம் தேதி வரை சுதந்திர தினத்தைஆர்வமுடன் கொண்டாட ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கொண்டாட்டங்களை செல்ஃபிகளாக படம் எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவேற்றம்: இந்நிகழ்வுகளை www.harshartiranga.com என்ற இணையதளத்தில் செல்ஃபி படத்துடன் பகிரலாம். மேலும் எக்ஸ், யூ-டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications