‛‛மோடியை வீழ்த்த இது போதும்’’.. எங்களுக்கு பிரதமர் வேட்பாளர் தேவையில்லை.. சரத்பவார் கூறிய ரகசியம்
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எங்களது கூட்டணியின் பெயர் மட்டுமே போதும். எங்களுக்கு பிரதமர் வேட்பாளர் என்பது தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
‛இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் 10க்கும் அதிகமான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாக உள்ளது.
மேலும் ஒருங்கிணைப்பாளர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்க மறுத்துவிட்டார். ‛இந்தியா' கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி தான் உயர்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு மேலாக தலைவர் பதவி கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் காணொலி காட்சி வாயிலாக நடந்த மீட்டிங்கிற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் என்பது தேவையில்லை. எங்களது கூட்டணியின் பெயரே போதும். மேலும் மாற்று அரசியலை எங்களால் தர முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
இன்றைய ‛இந்தியா' கூட்டணி கூட்டத்தில் சில தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவை கூட்டணியின் தலைவராக நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதனை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதோடு நிதிஷ் குமாரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க பலர் பரிந்துரைத்தனர். ஆனால் இப்போது அது தேவையில்லை என நிதிஷ் குமார் ஏற்க மறுத்துவிட்டார். தற்போதைய சூழலில் ‛இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications