பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தினால்.. "இந்தியா" கூட்டணி உடைந்து விடக்கூடும்.. போட்டு உடைத்த கார்கே
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் ? என பாஜக விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளன. தங்களின் கூட்டணிக்கு " இந்தியா' என பெயர் வைத்துள்ளன. பாஜகவை மீண்டும் ஆட்சியை பிடிக்க விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
பிரதமர் வேட்பாளர் யார்?: இந்தியா கூட்டணி கட்சிகள் பாட்னா, பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் கூட்டம் நடத்தி, தேர்தலை எதிர்கொள்வது குறித்த வியூகங்களை வகுத்தன. ஆனால், தற்போது ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் மந்தமாகி இருப்பதாக நிதிஷ்குமாரே விமர்சித்தார்.
அதேபோல, மத்திய பிரதேசத்தில் தங்களுக்கு காங்கிரஸ் சீட் ஒதுக்க மறுப்பதாக அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். இப்படி, இந்தியா கூட்டணியில் சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. பாஜகவும் அவ்வப்போது இந்தியா கூட்டணியை விமர்சித்து வருகிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் எனவும் இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
கூட்டணி உடைந்து விடக்கூடும்: இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டி ஒன்றில் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தினால் கூட்டணி உடையக்கூடும் என வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதால் கூட்டணி உடையக்கூடும். முதலில் வெற்றி பெற வேண்டும்.
பிறகு கட்சிகள் சேர்ந்து யார் பிரதமர் என்பது குறித்து பேசுவதுதான் சிறந்ததாக இருக்கும். பொதுத் தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து இயங்குவதை இது உறுதி செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து மாநில தேர்தல் மிகவும் முக்கியம். எனவே, அதில் கவனம் செலுத்துகிறோம். மாநிலத் தேர்தல் முடிந்ததும் இந்தியா ' கூட்டணி யில் காங்கிரஸ் கவனம் செலுத்தும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் காங்கிரஸ் பேசியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications