தேர்தல் பத்திரங்களால்! தேர்தலுக்கு முன்பாக வசமாக சிக்கிய பாஜக! இந்தியா கூட்டணி வகுக்கும் செம பிளான்
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவு நன்கொடை பெற்றுள்ள விவகாரத்தை கையில் எடுத்து லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு நெருக்கடி அளிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அதிக அளவிலான தொகையை பாஜக நன்கொடை பெற்று இருப்பதை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதன்படி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நிறுவனங்கள், அதிக அளவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்து இருப்பதால் இந்த டேட்டாக்களை பயனபடுத்தி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை கார்னர் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேபோல,தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெரும் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அட்டாக் செய்யவும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேர்தல் பணியை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருவதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாஜகவுக்கு நெருக்கடி: ஆனால், தேர்தல் பத்திர விவகாரம் பாஜகவிற்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விவகாரத்தை கச்சிதமாக பிடித்துக் கொண்டு பாஜகவிற்கு தேர்தலில் கடும் நெருக்கடியை கொடுக்க இந்தியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு இருக்கின்றன. நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்து இருந்தன. குறிப்பாக ராகுல் காந்தி பாஜகவை மிகக்காட்டமாக சாடியிருந்தார்.
ராகுல் காந்தி பேச்சு: ராகுல் காந்தி கூறுகையில், தேர்தல் பத்திர திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் மோசடி செயலாகும். இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட பணம் அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தவும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் அரசை கவிழ்க்கவும் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரங்களுக்கும், மாநிலங்களில் காங்கிரஸ் அல்லது பிற எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்கள் வழங்கிய ஒப்பந்த பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
முதலிடத்தில் பாஜக: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அண்மையில் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. கடந்த 2019 ஏப்ரல் 12 ஆம் தேதி முதல், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வரையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்ற நன்கொடை விவரங்கள் இதில் இடம் பெற்று இருந்தன. எஸ்பிஐ வங்கி அளித்த இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் நேற்று முன் தினம் பகிர்ந்தது.
இதில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்கிய தனியார் நிறுவனங்கள், இதன் மூலம் நிதி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்கள் அனைத்தும் வெளியாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக மத்தியில் ஆளும் பாஜக ரூ.6,060.21 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டி இருக்கிறது. காங்கிரஸ் ரூ.1,421.86 கோடியும், ஆம் ஆத்மி ரூ.65.45 கோடியும் பெற்று இருக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் எவ்வளவு?: மாநில கட்சிகளை பொறுத்தவரை மொத்தம் ரூ.5,221 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியுள்ளன. இது பாஜக பெற்ற தொகையை விட ரூ.839 கோடி குறைவாகும். பிராந்திய கட்சிகளில் அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.1,609.53 கோடி கிடைத்துள்ளது. அடுத்ததாக பாரதிய ராஷ்டிர சமிதி ரூ1,214.70 கோடி, பிஜூ ஜனதாதளம் ரூ.775.50 கோடி, திமுக. ரூ.639 கோடி பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications