வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா
டெல்லி: வங்கிக் கணக்கில் வந்து விழுந்த மிகப் பெரிய தொகையைப் பெண் ஒருவர் வேண்டாம் எனத் திருப்பி கொடுக்க முன்வந்து இருக்கிறார். இதற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.. அவர் இதுபோல செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் வங்கி பரிவர்த்தனைகள் எல்லாம் டிஜிட்டல் முறையில் மாறிவிட்டது. இதனால் பிழைகள் மிகக் குறைவாகவே நடக்கிறது என்ற போதிலும் பிழைகள் முழுமையாக இல்லாமல் போய்விடவில்லை. மிகப் பெரிய தொகை திடீரென ஒருவரது வங்கிக் கணக்கில் வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தே தான் வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ரூ.10 கோடி
அங்கு மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவிக்கு வங்கிக் கணக்கில் திடீரென மர்மமான முறையில் சுமார் ₹10 கோடி ரூபாய் வந்துள்ளது. மற்றவர்களாக இருந்தால் வந்த வரை லாபம் என அதை வைத்துக் கொள்வார்கள். இதுபோல தவறுதலாக வந்த பணத்தை, தங்கள் சொந்த பணம் போல நினைத்து செலவழித்த பலரை நாம் பார்க்க முடியும். ஆனால், இந்த பெண் அதுபோல செய்யவில்லை.
அந்த பணம் நம்முடையது இல்லை. எனவே அதைத் தொடக்கூடாது என்பதில் இவர் உறுதியாக இருந்துள்ளார். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஒரு ரூபாய் கூட எடுக்க அவர் மறுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ள சூழலில், பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். இது அந்த பெண்ணின் அசாத்திய நேர்மையைப் பறைசாற்றுவதாகவே இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
என்ன நடந்தது
பிச்வான் அடுத்துள்ள தேவ்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரஸ்பன் பஹேலியாவின் மனைவி ரீட்டா. நவராத்திரி கொண்டாட்டத்திற்காகத் தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க அருகே உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது விடுமுறை வங்கி மூடப்பட்டு இருந்ததால் பணம் எடுக்க அருகே உள்ள ஏடிஎமிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்து போய்விட்டார்.
அவரது பேங்க் ஆஃப் இந்தியா கணக்கில் ₹9,99,49,588, அதாவது கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய் இருப்பு காட்டப்பட்டது. தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பேலன்ஸ் எப்படி வந்தது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. இதனால் ரீட்டா மீண்டும் ஒருமுறை வேறு ஒரு ஏடிஎமிற்கு போய் பேலன்ஸை செக் செய்துள்ளார். அப்போது அதில் காட்டப்பட்ட பேலன்ஸ்ஸை அவர் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது..
நேர்மை
இவ்வளவு பெரிய தொகை இருந்தால் பலரும் அதை எடுக்கவே நினைப்பார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பங்களில் பணத்தை எடுக்கவே பலரும் முயன்றுள்ளனர். ஆனால், ரீட்டா ஒரு ரூபாய் கூட எடுக்க முயலவில்லை. பணம் யார் என்பதே தெரியவில்லை.. அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பதில் தெளிவு கிடைக்கும் வரை பணத்தைத் தொடக்கூடாது என்று முடிவு செய்துள்ளார். தனது குடும்பத்தாரிடம் இது குறித்துச் சொல்லி, ஏன் பணத்தை எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார். அவரது இந்த நேர்மைக்கு அக்கம் பக்கத்தினரும் உள்ளூர் மக்களும் பாராட்டி வருகின்றனர்.
வங்கி கொடுத்த விளக்கம்
வங்கியில் விடுமுறை நாள் என்பதால் ரீட்டா இது தொடர்பாக வங்கிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க முடியவில்லை. இருப்பினும், இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்லது பரிவர்த்தனைப் பிழையாக இருக்கலாம் என்று பேங்க் ஆஃப் இந்தியாவின் கரீம்கஞ்ச் கிளை மேலாளர் ரிஷிகாந்த் பாண்டே தெரிவித்தார். லீவ் முடிந்து வங்கி திறக்கப்பட்டவுடன், விசாரணை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த அசாதாரண சம்பவம் அங்கு மாவட்டம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்பாராத விதமாக வந்த இந்தப் பணத்தை அவரது குடும்பத்தினர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருந்தும், ரீட்டா காட்டிய நேர்மைக்காக சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications