அலர்ட் ஆகுது இந்தியா.. டன் கணக்கில் திரும்ப வரும் தங்கம்! இப்போ நம்மகிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா?
டெல்லி: உலக அளவில் அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் உள்ளிட்டவை காரணமாக பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் உலக அளவில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த 2025-2026 ஆம் நிதி ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்த இருப்பிலிருந்து இருந்து 168 டன் தங்கத்தை இந்தியா மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் மட்டும் 104.23 டன் தங்கம் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு முன்பு முதல் பாதியில் 63.83 டன் தங்கம் மாற்றப்பட்டது.

தங்க கையிருப்பு
இதன் மூலம், ஒரு ஆண்டில் மொத்தம் 168.06 டன் தங்கம் இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னால் முக்கிய காரணமாக உலக அரசியல் சூழ்நிலைகள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ரஷ்ய - உக்ரைன்தொடங்கிய பிறகு, ரஷ்யாவின் வெளிநாட்டு டாலர் கையிருப்புகள் முடக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. இதனால், வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துகள் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் உருவானது.
RBI தங்கம்
இதன் விளைவாக பல நாடுகள் தங்களது தங்க கையிருப்புகளை தாயகத்திற்கு மாற்றும் முயற்சியில் இறங்கின.
இந்தியாவும் அதே வழியில் கடந்த மூன்று ஆண்டுகளாக திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு இங்கிலாந்து மத்திய வங்கி (Bank of England) மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (Bank for International Settlements) போன்ற நிறுவனங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கம் தற்போது இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
880.52 டன் தங்கம்
தற்போது இந்தியாவின் மொத்த தங்க கையிருப்பு 880.52 டன் ஆக உள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி இதன் மதிப்பு சுமார் 122 பில்லியன் டாலராகும். இதில் 77 சதவீதம் தங்கம் இந்தியாவிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது 2023 மார்ச் மாதத்தில் வெறும் 38 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, மிக குறுகிய காலத்தில் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வரும் செயல்முறை கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி
எனினும், மொத்த தங்க கையிருப்பில் பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இருப்பு சுமார் 10 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு அதிகரித்திருப்பது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. 11.7 சதவீதமாக இருந்த தங்கத்தின் பங்கு தற்போது 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், உலகின் பல நாடுகளும் தங்களது தங்க சேமிப்பை தீவிரமாக உயர்த்தி வருகின்றன.
எதிர்கால நிதி பாதுகாப்பு
குறிப்பாக போலந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக அளவில் தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்தி வருகின்றன. உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில், தங்கம் மீண்டும் முக்கியமான பாதுகாப்பு சொத்தாக மாறி வருவது தெளிவாகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, எதிர்கால நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.













Click it and Unblock the Notifications