"அணுகுண்டு" வீசுவதாக.. தேவையில்லாமல் வாயை விட்ட பாகிஸ்தான் முனீர்.. இந்தியா கொடுத்த தரமான பதிலடி
டெல்லி: சிந்து நதிகளில் இந்தியா அணை கட்டினால் அதை அணுகுண்டை கொண்டு தாக்குவோம் என்று அசீம் முனீர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் முனீரின் இந்தப் பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தானின் இந்த மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அடிபணியாது என்றும் தேச நலன்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் இருந்தபடி அவர் இன்று அணு ஆயுத மிரட்டல் விடுத்திருந்தார். சிந்து நதிகளில் இந்தியா அணை கட்டினால் அதை அணு ஆயுதம் கொண்டு அழிப்போம் என்பது போலப் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

இந்தியா கண்டனம்
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் இந்தப் பொறுப்பில்லாத பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிந்து நதியில் இந்தியா கட்டிய அணைகளை அழிக்க ஏவுகணைகளை வீசுவோம் என முனீர் கூறியிருந்த நிலையில், இதை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்து அச்சுறுத்துவது விடுப்பது வழக்கமான ஒன்று தான் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோல பொறுப்பில்லாத கருத்துகளைக் கூறும் பாகிஸ்தானின் தன்மை குறித்து சர்வதேச சமூகம் தங்களது முடிவுகளை எடுக்கலாம் என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. இதுபோன்ற கருத்துகள் அணு ஆயுதத்தை வைத்திருக்கும் பாகிஸ்தானின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா அடிபணியாது
பயங்கரவாதக் குழுக்களுடன் ராணுவம் கைகோர்த்துச் செயல்படும் நிலையில், இது கவலையளிப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற கருத்துக்கள் வெளிவந்தது வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வட்டாரங்கள்
பாகிஸ்தான் தளபதி முனீர் கருத்துகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற பொறுப்பில்லாத கருத்துகளைக் கூறுவதை ஏற்க முடியாது என்று நமது மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் பேச்சு ஒரு குறிப்பிட்ட பேட்டர்னின் ஒரு பகுதியாகும்; அமெரிக்கா பாகிஸ்தான் ராணுவத்தை ஆதரிக்கும்போதெல்லாம், அவர்கள் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பாகிஸ்தானில் அரசைத் தவிர்த்துப் பிற சக்திகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்குவதற்கு ஆபத்து உள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதற்கான ஒரு அறிகுறியாகும் இது. அங்கு ராணுவம் தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையே இது காட்டுகிறது" என்று கூறுகிறார்கள்.
பின்னணி
இந்தியா சிந்து மற்றும் அதன் துணை நதிகளில் அணைகளைக் கட்டி முடிக்கும் வரை பாகிஸ்தான் காத்திருக்கும் என்றும், பின்னர் அந்த அணைகளை அழிக்க ஏவுகணைகளை ஏவும் என்றும் முனீர் இன்று பேட்டி அளித்திருந்தார். இதுவே சர்ச்சைக்கு முக்கிய காரணமாகும். அதிலும் இப்போது முனீர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவில் இருந்தபடி முனீர் இதுபோல பேசுவது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஒரு பக்கம் டிரம்ப்பின் வர்த்தகப் போரால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்குப் போய் இருக்கும் முனீர் இதுபோன்ற கருத்துகளைக் கூறியிருக்கிறது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications