இந்தியாவுக்கு சொந்தமான கால்வன் பள்ளத்தாக்கை சீனா குறி வைப்பது ஏன்?.. எல்லையில் என்ன நடக்கிறது?
டெல்லி: இந்தியாவுக்கு சொந்தமான கால்வன் பள்ளத்தாக்கு பகுதியை சீனா குறி வைப்பது ஏன்?
Recommended Video
கடந்த ஆண்டு இந்திய பகுதியில் தார்புக் ஷையாக்- டிபிஓ சாலையை இந்தியா கட்டியது. இது எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு 10 கி.மீ. உள்ளடக்கியே உள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நதிக்கு செங்குத்தாக செல்கிறது. எனவே தொழில்நுட்ப ரீதியில் பார்த்தாலும் இந்தியாவுக்குச் சொந்தமான இடத்தில்தான் சாலை கட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதை ஏற்க சீனா மறுத்து வருகிறது. சாலை கட்டப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இது ஒரு புறமிருக்க லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முப்படைகள்
இந்தியா- சீனா மோதல் குறித்து பிரதமர் அலுவலகமும் ஆலோசனை நடத்தியது. முப்படைகளின் தலைவர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆனால் சீனாவின் செயல்பாடுகளை பார்த்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றே தெரிகிறது. மாறாக இந்தியாவுடன் போருக்கு தயாராகி வருவது போல் உள்ளது.
பாதுகாப்பு துறை
சீன பகுதிக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்புத் துறைக்கான சாலைகளை சட்டவிரோதமாக இந்தியா கட்டியதாக சீன நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பல பத்தாண்டுகளில் சீனாவும் இந்தியாவும் துப்பாக்கிச் சண்டை நடத்தியதே இல்லை. ஆனால் எல்லையில் நடப்பதை பார்த்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வராதது போல் இருக்கிறது. 1962 ஆம் ஆண்டு இந்திய- சீன போருக்கு பின்னர் இது போன்ற ஒரு பதற்றத்தை எல்லையில் பார்த்ததில்லை என்றே விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.
சிக்கிம்
கொரோனா தொற்றால் உலக நாடுகளே கடுமையாக பாதித்துள்ள நிலையில் சீனாவின் இந்த போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு. இது வரையறுக்க முடியாத எல்லையாகும். ஒரு முனையில் காஷ்மீரும், மறுமுனையில் மியான்மரும் உள்ளது. இந்திய- சீன எல்லை 3,500 கி.மீ. நீளம் உள்ளது. கடந்த இரு வாரங்களாக சிக்கிம் மற்றும் லடாக் எல்லைகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
பகிரங்கம்
தற்போது கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டுள்ளது. சொந்த இடத்தில் சொந்த எல்லையில் இந்தியா சில உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. தொலைதூர பகுதிகளுக்கு இந்திய படைகள் விரைந்து செல்லவே இந்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இதன் மூலம் நேரமும் மிச்சமாகும். சீன படையின் ஊடுருவலையும் தடுக்க முடியும். இது போல் இந்தியா சாலைவசதி உள்ளிட்டவற்றை செய்து கொண்டால் தங்களால் ஊடுருவுவது சவாலான விஷயம் என்பதால் சீனா இதை பகிரங்கமாக எதிர்த்து வருகிறது.
கால்வன் பள்ளத்தாக்கு
கால்வன் பள்ளத்தாக்கு பகுதியை குறிவைத்தே சீனா இது போல் செய்கிறது. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சீன போரின் போது போர் நடந்த இடமாக கால்வன் பள்ளத்தாக்கு கருதப்படுகிறது. அந்த கால்வன் பள்ளத்தாக்கில் ஒரு சிறிய பகுதி மட்டுமே சீனாவுக்கு சொந்தமானது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த கால்வன் பள்ளத்தாக்கு பகுதியுமே தங்களுக்கு சொந்தமானது என சீனா கோருகிறது. பள்ளத்தாக்கு விவகாரத்தில் தனது உரிமை கோரல்களை மூன்று முறை சீனா மாற்றிக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
போராட்டம்
கடந்த இரு வாரங்களாக 5000-க்கும் மேற்பட்ட படைகளை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிற்கவைத்துள்ளது. அங்கு 100 டென்ட்டுகளை அமைத்துள்ளனர். சீனாவின் போர் விமானங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றமான சூழலை சீனா ஏற்படுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் சீனா பிராந்திய உரிமை கோரல்களை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.