அதெப்படி காஷ்மீரை பற்றி குறிப்பிடலாம்? பாகிஸ்தான்- சீனாவின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
டெல்லி: பாகிஸ்தான் - சீனா நாடுகளின் கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மத்திய பாஜக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 7-ந் தேதி சீனா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். சீனாவின் பிரதமர் லி கியாங்கை ஷபாஸ் ஷெரீப் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதித்தார்.

இதனையடுத்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். பொதுவாக இருநாட்டு தலைவர்களின் சந்திப்புகளில் அந்த இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பான வாசகங்கள் இடம் பெறும். இதுதான் நடைமுறை.
ஆனால் பாகிஸ்தான் - சீனா நாடுகளின் கூட்டறிக்கையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எப்போதோ நிறைவேற்றிய தீர்மானங்கள், ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் - சீனா கூட்டறிக்கையில் இடம் பெற்றிருந்ததற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரத்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பாகிஸ்தான் -சீனா கூட்டறிக்கையில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து தேவையற்ற வகையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு மிக தெளிவானது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இது தொடர்பாக எந்த ஒரு நாட்டுக்கும் கருத்து தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை என்றார்.
மேலும் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு இடையூறுகளை உருவாக்கி அப்பகுதிகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இந்திய நிலப்பகுதிகளில் தம்மை வலுப்படுத்த நினைக்கிறது. இதற்கான இதர நாடுகளின் நடவடிக்கைகளை இந்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது.
சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் இந்திய நிலப்பகுதிகளும் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இடம் பெற்றுள்ளதை ஏற்கவும் முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications