பாக் விமானப்படைக்கு பெரும் இழப்பு.. 30 மில்லியன் வேஸ்டா போச்சே! புல்வாமாவில் இந்திய ராணுவம் சம்பவம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை இந்தியா தொடங்கியதும், பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருந்தன. அந்த விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு JF-17 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
இன்று அதிகாலை புல்வாமா பகுதியில் பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. இந்திய ராணுவத்தின் குண்டு வீசும் சத்தத்திற்கு மாற்றாக வித்தியாசமாக இந்த சத்தம் இருந்திருக்கிறது. இதனையடுத்து விமானம் விபத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் எனும் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுட்டு வீழ்த்தப்பட்டது பாகிஸ்தானின் JF-17 ரக போர் விமானம் என்றும், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது இது வீழ்த்தப்பட்டிருக்கிறது எனவும் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 19 கி.மீ தொலைவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தில் சிக்கியது போர் விமானம்தான் என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர்.
ஆனால் எந்த நாட்டின் விமானம் அது என்பது இன்னும் தெரியவில்லை. இந்தியாவின் 4-5 போர் விமானங்களை நாங்கள் வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
JF-17 என்பது சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் தயாரித்த மலிவு விலை போர் விமானமாகும். இந்தியா வாங்கியிருக்கும் ரஃபேல் 100 மில்லியனை விட விலை அதிகம். ஆனால், JF-17 வெறும் 30 மில்லியன்தான். இருப்பினும் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க சிறப்பான விமானங்களில் இதுவும் ஒன்று. இதனை இந்தியா வீழ்த்தியிருப்பது சிறப்பான நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.
இன்று அதிகாலை சரியாக 1.30 மணியளவில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்பதை தொடங்கியது. கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இது நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 9 இடங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், 4 இடங்கள் பாகிஸ்தானும் ஆகும்.
தாக்குதலில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் யார் உயிரிழந்தார்? மொத்தம் எத்தனை உயிரிழப்புகள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை என முப்படைகளும் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வறுமையும், பொருளாதார மந்த நிலையும் உள்ள பாகிஸ்தான் எப்படி இந்த தாக்குதலை நடத்தும் என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications