அருணாச்சல பிரதேசம் நோக்கி காய் நகர்த்தும் சீனா.. முஷ்டியை முறுக்கும் இந்தியா.. எல்லை நிலவரம் என்ன!
டெல்லி: இந்திய எல்லைகளில் சீனா தனது ராணுவத் துருப்புகளை குவித்து வரும் நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் இந்திய ராணுவம் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது முதலாக இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. தொடர் ராணுவ நடவடிக்கைகள், பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சீன ராணுவம் தனது துருப்புகளை வாபஸ் பெற்றது. இருந்தபோதிலும், லடாக்கின் சில பகுதிகளில் இருந்து திரும்பிச் செல்ல சீன ராணுவம் மறுத்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அந்நாட்டுடன் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை இந்தியா தற்போது வரை நடத்தி வருகிறது.

லடாக் விவகாரம் இவ்வாறு இருக்க, அருணாச்சலப் பிரதேசத்தை குறிவைத்து அண்மைக்காலமாக சீனா தனது காய்களை நகர்த்தி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை நீண்டகாலமாக உரிமைக் கொண்டாடி வரும் சீனா, அதையொட்டிய எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை பல மடங்கு அதிகரித்துள்ளது. ராணுவத் தளங்கள், போர் விமானங்கள் வந்து இறங்குவதற்கான ஓடுதளங்கள், பெரிய அளவிலான மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை சீனா அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதுவரை இல்லாத அளவுக்கு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தனது ராணுவப் படைகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தனது எல்லைப் பகுதிகளில் ராணுவ பலத்தை பெருக்குகிறோம் என சீனா கூறிக்கொண்டாலும், இந்தியாவுக்கு அந்நாடு தரும் எச்சரிக்கை சமிக்ஞையாகவே இதனை கருத வேண்டியுள்ளது. மேலும், சீனாவின் சமீபகாலமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்தியாவை குறிவைத்தே இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தெற்கே இலங்கை, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே லடாக் எல்லை, வடகிழக்கில் அருணாச்சல பிரதேச எல்லை என நாலாபுறமும் சீனா தனது தடங்களை அழுத்தமாக பதித்து வருகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிப்பதை உணர்ந்த இந்தியா, அந்த பிராந்தியத்தில் அண்மைக்காலமாக தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக அருணாச்சல பிரதேச எல்லையில் தீவிர போர்ப் பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்துவது, மலைகளை தாண்டி வரும் எதிராளிகளை அங்கேயே வீழ்த்துவது, நவீன பீரங்கிகளை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, அருணாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவிலான ராணுவ வீரர்களையும் இந்தியா நிறுத்தியுள்ளது. ஒருவேளை, சீனா அந்தப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டால் அதனை சமாளிக்க நமது ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications