ஹை அலர்ட்.. பிரதமர் மோடி, குடியரசு தலைவருக்கு அச்சுறுத்தல்? உளவுத்துறை எச்சரிக்கை.. முக்கிய முடிவு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவமும் விமானப்படையும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது பல முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பேசி இருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தனது முப்படைகளைக் கொண்டு தீவிரவாத முகாம்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் 25க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ரஃபேல் போர் விமானங்கள், அதிநவீன ஏவுகணைகள், குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் குறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி,"பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியது; பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இது மிகவும் கொடூரமானது; இந்த தாக்குதல் இந்தியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள் ஒருவர் கூட கொல்லப்படவில்லை" என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலாக பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். இந்த நிலையில் ராணுவம் அல்லது தீவிரவாத குழுக்கள் மூலமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் இருக்கும் அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து காஷ்மீர் எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா இடையேயான போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்த நிலையில், அடுத்த சில நாட்கள் அவர்கள் பயணம் செய்ய தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோரின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட முக்கிய அலுவல்களை மட்டும் மோடி கலந்து கொள்வார் என தகவல் கசிந்துள்ளது.












Click it and Unblock the Notifications