"இந்தியா ஜனநாயக நாடு".. காங்.கிற்கு எதிரான டூல் கிட் வழக்கு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் டூல் கிட் என்று இணையத்தில் வெளியான டூல் கிட்களுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் என்று கூறி பாஜக வெளியிட்ட சில ஆவணங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை மத்திய அரசு எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இதை காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் இதற்கு எதிராக டூல் கிட் ஒன்றை உருவாக்கி பிரதமர் மோடியை பொய்யாக விமர்சித்து வருவதாக பாஜக புகார் அளித்தது. பிரதமர் மோடியை திட்டமிட்டு விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் இந்த டூல் கிட்டை உருவாக்கியதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

வழக்கு
ஆனால் இந்த டூல் கிட்டை நாங்கள் உருவாக்கவில்லை, பாஜக பொய் பிரச்சாரம் செய்கிறது என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் டூல் கிட் குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாஷங் சேகர் ஜா வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக டூல் கிட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை
ஐபிசி பிரிவு 13வான உபா சட்டம், கிரிமினல் சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். இதில் இந்திய கொரோனா வகை என்று வரி உள்ளது. அதேபோல் இந்துக்களுக்கு எதிரான கருத்து உள்ளது. இதை விசாரிக்க வேண்டும். இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

கோபம்
அதோடு மற்ற கட்சிகளும், அமைப்புகளும், பொது மக்களும் இந்தியாவிற்கு எதிரான ஆண்டி இந்தியன் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும் மனுதாரர் வழக்கறிஞர் ஷாஷங் சேகர் ஜா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் டூல் கிட்களுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
நீதிபதிகள் சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதில், இது போன்ற டூல் கிட்கள் எல்லாம் கருத்துரிமை தொடர்பானது. அரசியல் பிரச்சாரம் , கொள்கை தொடர்பானது இது. இதில் எந்த தவறும் இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதை படிக்க வேண்டாம். உங்களுக்கு டூல் கிட் கோபம் தந்தால் அதை பார்க்க வேண்டாம்.

அரசியல்
ஒரு அரசியல் பிரச்சாரம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை பார்க்க வேண்டாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது. இது போன்ற விவகாரங்களுக்கு எல்லாம் சட்ட பிரிவு 32ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த வழக்கை எல்லாம் விசாரிக்க முடியாது, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications