உலகிலேயே இந்தியாவில் தான் நீதித்துறை சுதந்திரமாக உள்ளது. . சொல்வது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
டெல்லி: இந்தியாவை போல உலகில் வேறு எங்கும் நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, பல வழக்குகளில் ஊடகங்கள் தனி விசாரணை நடத்துவதாக பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ இவ்வாறு பேசியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நீதிபதி சத்ய பிரதா சின்காவின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு பேசினார்.

2 அடி பின்னோக்கி. .
அப்போது அவர் கூறுகையில், 'புதிய ஊடக அமைப்புகளுக்கு அசாத்திய திறன் உள்ளது. இந்த ஊடகங்கள் தகவல்களை அதிவேகமாக பரப்பும் திறனை கொண்டுள்ளன. உண்மை எது போலி எது, நல்லது எது, தீயவை எது என வேறுபடுத்தி பார்க்கும் திறன் அதற்கு இல்லாதது போல தோன்றுகிறது. சமூக ஊடகங்கள் மோசமாக உள்ளன. நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அவை மேற்கொள்கின்றன. ஊடகங்கள் தங்கள் பொறுப்பை மீறி செயல்படுவதன் மூலம் நமது ஜனநாயகத்தை 2 அடி பின்னோக்கி இழுத்து செல்கிறீர்கள்.

உண்மைக்கு புறம்பானது
நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு போதுமான பாதுகாப்பு ஓய்வுபெற்ற பின்னரும் கூட அளிக்கப்படுகிறது. ஆனால், நீதிபதிகளுக்கு அப்படி இல்லை. நீதிபதிகள் சுக வாழ்க்கை வழ்வதாக மக்கள் மனதில் தவறான கண்ணோட்டம் உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பணியாற்றுகின்றனர். விடுமுறையை ஜாலியாக கழிக்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்படும் கதைகள் உண்மைக்கு புறம்பானது.

முக்கிய காரணம்
டிஜிட்டல் ஊடகங்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்களுக்கு கல்வி, விழிப்புணர்வு அளிக்க வேண்டும். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் தங்கள் வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து சிறப்பாகவும், சில கட்டுப்பாடுகளுடனும் பயன்படுத்த வேண்டும். இதேபோல், நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததும், உள்கட்டமைப்பை மேம்படுத்தாததும் தான் நாட்டில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு முக்கியக் காரணம்" என பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் பதில்
இந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஊடக விசாரணை குறித்த தலைமை நீதிபதி ரமணாவின் கருத்து இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் நிலமை குறிந்த பார்வையாக உள்ளது. இது குறித்து யாரும் பேச விரும்பினால், பொது களத்தில் விவாதிக்கலாம். ஆனால் நீதிபதியின் கருத்து தொடர்பாக நான் எதையும் கூற விரும்பவில்லை. இந்திய நீதித்துறையும் நீதிபதிகளும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை போல உலகின் எந்த பகுதியிலும் நீதிபதியோ அல்லது நீதித்துறையோ பாதுகாப்பாக இல்லை என்பதை என்னால் தெளிவாக கூற முடியும். என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications