சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. பாகிஸ்தானே கிட்டதட்ட பாலைவனமாகிடும்! அடுத்து என்ன நடக்கும்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து கடந்த 65 ஆண்டுகளில் இந்தியா இதுபோன்ற முடிவை எடுப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் பாகிஸ்தான் மிக மோசமாகப் பாதிக்கப்படும். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1960ம் ஆண்டு போடப்பட்டது தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம். பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்துள்ள முடிவு மிகவும் முக்கியமானது.

சிந்து ஒப்பந்தம்
சுமார் 65 ஆண்டுகளாக இருந்த ஒப்பந்தத்தை இந்தியா முதல்முறையாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று புதன்கிழமை கூறுகையில், "1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம்.. தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம்" என்றார்.
1960க்கு பிறகு இந்தோ பாகிஸ்தான் வார், கார்கில் போர் உள்ளிட்ட போர்கள் 2019இல் புல்வாமா மற்றும் 2016இல் உரி எனப் பல தாக்குதல்கள் நடந்த போதிலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறவில்லை. உரி தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தபோதே பிரதமர் மோடி இது தொடர்பாகப் பேசியிருந்தார். அப்போதே ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது
இருப்பினும், அப்போதெல்லாம் ஒப்பந்தம் குறித்து எந்தவொரு முடிவையும் இந்தியா எடுக்கவில்லை. ஆனால், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாளே இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தம் என்பது உலக வங்கி முன்னெடுப்பால் கையெழுத்தானது. இதில் எதாவது பிரச்சினை வந்தால் சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என அதில் எந்தவொரு பாயிண்டும் இல்லை. மாறாக இப்போது பாகிஸ்தான் வசம் மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது.
பாகிஸ்தான் வசம் உள்ள ஆப்ஷன்கள்
இரு நாடுகளுக்கும் இடையிலான நீர் பகிர்வு தொடர்பாக எழும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளின் ஆணையர்களைக் கொண்ட PIC எனப்படும் நிரந்தரச் சிந்து நதி ஆணையம் உள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்சினை பிஐசி ஆணையத்தால் தீர்க்க முடியாவிட்டால் அடுத்து உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் அது பரிந்துரைக்கப்படும்.
சமீபத்தில் கிஷெங்கங்கா மற்றும் ரேட்லே நீர் மின் திட்டங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் கூட இந்த நடுநிலை நிபுணர்களிடமே விசாரணைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் இந்தியாவின் முடிவையே அந்த நடுநிலை குழு ஆதரித்து இருந்தது. எனவே, இந்த விவகாரத்திலும் அவர்கள் சூழலைக் கருத்தில் கொண்டே முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.
கடைசி வாய்ப்பு
இந்த வல்லுநர் குழு எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், பாகிஸ்தானுக்குக் கடைசியாக ஒரே ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இந்த விஷயத்தைப் பிரிவு IXஇன் விதிகளின் கீழ் ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு (PCA) கொண்டு செல்லலாம். இருப்பினும், அங்கும் பாகிஸ்தானுக்குச் சாதகமான முடிவு கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.
ஒப்பந்தம் சொல்வது என்ன
அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் அயூப் கானுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தனித்தையாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. அந்த ஒப்பந்தத்தில், "பத்தி (3)-ன் விதிகளின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் விதிகள், இரு அரசும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தம் போடும் வரை வரை அமலில் இருக்கும்" என தெளிவாகக் கூறுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதேநேரம் பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது முக்கியமானதாகவே பார்க்கப்படும்.
ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதுதான் பாகிஸ்தானுக்கு முதன்மை நீர் ஆதாரமாக இருக்கிறது. பாகிஸ்தான் மக்கள்தொகையில் பெரும்பகுதி மற்றும் அந்நாட்டுப் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பகுதி சிந்து நதி அடிப்படையிலேயே இருக்கிறது. அந்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயம் மற்றும் குடிநீருக்குச் சுமார் 80% வரை சிந்து நதியே ஆதாரமாக இருக்கிறது.
தற்போதைய சூழலில் நீரை நிறுத்தி வைக்க இந்தியாவில் போதிய உட்கட்டமைப்பு இல்லை என்ற போதிலும், சில ஆண்டுகளில் இந்தியா அதை ஏற்படுத்தும். அப்போது பாகிஸ்தானுக்கு மிக பெரிய சிக்கலையே அது தரும். அந்நாட்டின் பெரும்பகுதி இதனால் கடுமையான நீர் பஞ்சத்தை கூட எதிர்கொள்ளும் அபாயம் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications