ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஓமிக்ரானுக்கு உயிரிழப்பு.. இந்தியாவில் முதல் பலி பதிவு!
டெல்லி: ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஓமிக்ரானுக்கு உயிரிழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் பலி தற்போது பதிவாகியுள்ளது. இரு முறை ஓமிக்ரான் நெகட்டிவ் என முடிவு வந்த நிலையில் அந்த முதியவர் உதய்பூரில் டிசம்பர் 31 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை லவ் அகர்வால் கூறுகையில் ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஓமிக்ரானால் இறந்துவிட்டார். இது தற்போது தொழில்நுட்ப ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது. அவர் வயது முதிர்ந்தவர். நீரிழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்தவர்.
அவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுப் பிரச்சினை உள்ளிட்டவை இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு டிசம்பர் 15 ஆம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து ஓமிக்ரான் சோதனையும் செய்யப்பட்டது.

ஓமிக்ரான் பாதிப்பு
இதன் முடிவுகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிடைத்தது. அப்போதுதான் அந்த முதியவர் ஓமிக்ரானால் பாதித்துள்ளது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு முறை ஓமிக்ரான் நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு, தைராய்டு உள்ளிட்ட நோய்களுடன் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியாவால் அவர் உயிரிழந்தார் என்றார்.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 58,097 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலை வந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

8 நாட்கள்
இந்தியாவில் ஓமிக்ரானால் 2,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 8 நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் 6.3 மடங்கை காட்டிலும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி கொரோனா டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் (10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அதில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாவது என்பதன் சதவீதம்) 0.79 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்று டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 5.03 சதவீதமாகியுள்ளது.

பாசிட்டிவிட்டி ரேட்
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துளளது. நாட்டில் உள்ள 28 மாவட்டங்களில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. அது போல் 43 மாவட்டங்களில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட் 5 முதல் 10 சதவீதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications