இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா பாதிப்பு- 125 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ஒரே நாளில் 125 பேர் மரணமடைந்தனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. அந்தந்த மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு, மரணம், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிடுகிறது.
இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை விரிவாக வெளியிடுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,44,47,536 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 1,34,096 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 523 நாட்களில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இந்தியாவில் 125 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,63,655 பேராகும்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,12,34,30,478 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 30,20,119 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டன. ஒரே நாளில் 11,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3,38,49,785 ஆகும். அதாவது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 98.26 சதவீதமாகும் உயிரிழப்பு விகிதம் 1.35 சதவீதமாகவும் உள்ளது. மொத்த தினசரி பாசிட்டிவிட்டி கேஸ்களின் எண்ணிக்கை 1.12 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட்டின் எண்ணிக்கை 2 சதவீதமாகும்.
தமிழகத்தில் 6,19,99,651 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடுவதற்கு தமிழக சுகாதாரத் துறை முனைப்பு காட்சி வருகிறது. தமிழகத்தில் 805 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஒரே நாளில் 929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 805 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,14,830 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications