இந்தியாவில் வெகுவாக குறையும் பாதிப்பு- 24 மணிநேரத்தில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று- 446 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 446 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று கணிசமான அளவு குறைந்து கொண்டே வருகிறது. நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13,000க்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 446 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,73,300. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,55,842. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,58,186.
நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 106,14,40,335. தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,59,272. இது கடந்த 247 நாட்களில் மிக குறைவானதாகும்.
இந்தியாவில் கேரளாவில்தான் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 7,427 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. மிசோரமில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பெரும்பாலான மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் இருக்கிறது.
கொரோனா மரணங்களில் கேரளாவில்தான் அதிகமாக பதிவாகி இருக்கிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 358 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 26 பேர்; தமிழகத்தில் 14 பேர் ; மேற்கு வங்கத்தில் 13 பேர்; கர்நாடகாவில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். எஞ்சிய மாநிலங்களில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 5-க்கும் கீழே பதிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications