இந்தியாவில் மீண்டும் கிடுகிடு உயர்வு- 46 ஆயிரத்தை கடந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு- 607 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 46 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 607 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்காவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,71,737 ஆகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் 1,287 ஆகவும் பதிவாகி உள்ளது.

ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா மீண்டும் 2-வது இடத்துக்குப் போயுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,25,58,530 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 607 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,36,365 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 34,159 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,17,88,440. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,33,725.
இந்தியாவில் மிக மிக அதிபட்சமாக கேரளாவில் மட்டுமே நேற்று 31,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் மட்டும் நேற்று 215 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அதேபோல் மகாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 5,031 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது; ஒரேநாளில் இம்மாநிலத்தில் 216 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தமிழகத்தில் 1,573 பேருக்கும் கர்நாடகாவில் 1,224 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் 27 பேரும் கர்நாடகாவில் 26 பேரும் கொரோனாவால் மரணமடைந்தனர். ஆந்திராவில் 1601 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இம்மாநிலத்தில் நேற்று 16 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமில் நேற்று 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டில் இதுவரை 60,38,46,475 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications