கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க உள்நாட்டிலேயே தயாரான தடுப்பூசி! அறிமுகப்படுத்துகிறார் மத்திய அமைச்சர்
டெல்லி: பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.
இந்திய பெண்கள் மத்தியில், இரண்டாவது மிக உயர்ந்த இறப்புகளுக்கு காரணமாக அமைவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் நகரங்களில் இருக்கும் பெண்களை விட கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் தான் இந்த புற்றுநோய்க்கு ஆளாவதாக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அண்மை காலங்களாக, பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கருப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் அதிக அளவியல் ஏற்பட்டு வருகிறது. இதில் கருப்பை வாயில் தொற்று ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடித்துவிட்டால், புற்றுநோய் ஏற்படுவதை தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியது. தடுப்பூசிக்கான சோதனைகள் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்கின்றன. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.