இறைச்சி உண்பவர்கள் தமிழகம், கேரளாவில் தான் அதிகம்.. ஆனால் மாட்டிறைச்சி உற்பத்தியில் உபி-தான் டாப்
டெல்லி: இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இறைச்சி அதிகம் உண்ணப்படுகிறது. அதேநேரம் மாட்டிறைச்சி உற்பத்தியைப் பொறுத்தவரை உபி, மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக இந்தியா டுடே டேட்டா இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சாலையோரக் கடைகளில் அசைவ உணவுகளை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வதோதரா மற்றும் ராஜ்கோட் நகரங்களிலும் அசைவ உணவுகளை மூடு வைத்து விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல குருகிராமில் குறிப்பிட்ட நாட்களில் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியிலும் அவைச உணவுகளை விற்கப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முட்டை சர்ச்சை
இந்தியர்களை உணவுப் பழகத்தை மாற்ற இதுபோன்ற முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மீன், இறைச்சி அல்லது முட்டை போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிடுவதாகப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும் இது போன்ற முயற்சிகள் தொடரவே செய்கிறது. முட்டையில் அதிகளவில் ஊட்டச்சத்து இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பள்ளிகளில் மதிய உணவின் ஒரு பகுதியாக முட்டைகளை அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தற்போது நாட்டில் மிகப் பெரிய விவாதமே எழுந்துள்ளது, மத்தியப் பிரதேச அரசு சமீபத்தில் தான் முட்டைகளை நீக்கிய நிலையில், கர்நாடகா முட்டையைச் சேர்த்திருந்தது.

தமிழகம் டாப்
தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் நாட்டில் உள்ள 70 சதவீத பெண்களும் 78 சதவீத ஆண்களும் ஏதோ ஒரு வகை இறைச்சியை உட்கொள்வதாகத் தெரிவிக்கிறது. தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்களின் விகிதம் 97%ஐவிட அதிகமாக உள்ளது. அதேநேரம் பஞ்சாப், ஹரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்கள் 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்
இந்தியாவில் குடும்பத்தின் சராசரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில், இறைச்சி நுகர்வும் நாட்டில் அதிகரித்துள்ளது. 2020 இல் மட்டும் இந்தியா மக்கள் ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டதாக OECD அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 50% மக்கள் வாரத்தில் ஒருமுறையாவது அசைவ உணவை உட்கொள்கிறார்கள். அசைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள போதிலும் மேற்கு வங்கம், கேரளா உட்பட 9 மாநிலங்கள் மட்டுமே இறைச்சி உண்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. மற்ற அனைத்து மாநிலங்களில் இறைச்சி வகையைப் பொறுத்து சில கட்டுப்பாடுகள் உள்ளன.

மாட்டிறைச்சி உற்பத்தி
உலகில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சிகளில் 2.18 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் ஜெர்மனி முதல் 5 இடங்களில் உள்ளன. கடந்த 2014-15 முதல் 2019-20 வரை நாட்டின் இறைச்சி உற்பத்தி ஆண்டுதோறும் 5.15 சதவீதம் வளர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தியில் 30 சதவீதத்தை எருமை மாடுகள் ஆகும். மாநில வாரியாக பார்க்கும் போது உத்தரப் பிரதேசம் (15 சதவீதம்), மகாராஷ்டிரா (13 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கம் (10 சதவீதம்) முதல் 3 இடங்களில் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனாவால் பாதிப்பு?
கொரோனா காரணமாக நாட்டின் பல்வேறு தொழில்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் இறைச்சி துறை கொரோனாவால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் 2020-21 நிதியாண்டில் அதற்கு முந்தைய ஆண்டுக்கு இணையாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் டாப் 10 நிறுவனங்களில் ஏழு உத்தரப் பிரதேசத்திலும் இரண்டு மகாராஷ்டிராவிலும் ஒன்று டெல்லியிலும் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை உண்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாட்டிறைச்சி உண்பது 2014க்குப் பிறகுதான் அதிகரிக்கத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications