நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு.. இந்தியா உதவிக்கரம்! 5 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு
டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியா உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. 5 டன் அளவுக்கு உணவு பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
இன்று காலை ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் சீட்டு கட்டுக்களை போல சரிந்து விழுந்திருக்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குனார் மாகாணத்தில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் மீட்டு வரும் நிலையில், மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பல கிராமங்களை அழித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவ வீரர்களுடன் பொதுமக்களும் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கனுக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது x பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நிவாரண பொருட்களில் உணவு பொருட்கள் மட்டும் சுமார் 5 டன் அளவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது தவிர தற்காலிக கூடாரம் அமைக்க கூரைகள், மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications