சீனாவின் ஆதிக்கத்திற்கு செக்.. தென் சீன கடற்பகுதிக்கு 4 போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா..பரபர தகவல்
டெல்லி: சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் தென் சீன கடல் பகுதியில் நடைபெறும் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள நான்கு போர்க் கப்பல்களை அனுப்ப இந்தியக் கடற்படை முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கல்வான் மோதலுக்கு பிறகு நிலைமை மேலும் மோசமானது.
அதன் பிறகு எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பகுதிகளில் சீனா எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா பாதுகாப்புப் படையினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை.. பேரறிவாளன் வழக்கை விசாரணைக்கு ஏற்க மும்பை ஹைகோர்ட் உத்தரவு
தென் சீன கடல்
கடற்பகுதியில், குறிப்பாகத் தென் சீன கடல் பரப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இதில் சீனாவுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியக் கடற்படை தீவிரமாக உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்கக் கடற்படையுடன் இந்தியா நெருக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், தென் சீன கடற்பகுதியில் நடைபெறும் போர்ப் பயிற்சிகளில் கலந்துகொள்ள இந்தியா தனது போர்க் கப்பல்களைக் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியக் கடற்படை
இது குறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிசைல் டெஸ்ட்ராயர் உட்பட நான்கு கப்பல்கள் தென் சீன கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் இரண்டு மாத காலத்திற்குக் களமிறக்கப்படும். மற்ற நட்பு நாடுகளுடன் இணைந்து போர்ப் பயிற்சியை மேற்கொள்ளவும் அமைதி மேம்படுத்தல் நடவடிக்கையைத் தொடரும் வகையில் இந்த கப்பல்கள் களமிறக்கப்படுகிறது. கடல் பயணத்திற்கான சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த கப்பல்களின் செயல்பாடு இருக்கும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப் போர்ப் பயிற்சி
மேலும் இந்தச் சமயத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாம் கடற்பகுதியில் ஆண்டுதோறும் நடத்தும் கூட்டுப் போர் பயிற்சிகளில் இந்தியா பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னரே, பைடன் நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற போர்ப் பயிற்சிகள் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான் என்றாலும்கூட, சீனா உரிமை கொண்டாடி வரும் கடல் பகுதியில் இந்த பயிற்சி நடப்பதால் இதற்குச் சீனா பதிலடி கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சீனா உறவு
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தென் சீன பகுதி தொடர்பாகப் பிரச்சினை நிலவி வருகிறது. வளங்கள் நிறைந்த இந்த கடற்பகுதியைச் சீனா தனக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுகிறது. மறுபுறம் இது சர்வதேச கடல் எல்லையில் வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் தான் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா தனது ரொனால்ட் ரீகன் போர்க் கப்பலை இந்தப் பகுதிக்கு அனுப்பியிருந்தது. அதேபோல பிரிட்டனுடன் தனது போர்க் கப்பல்களை இங்கு அனுப்பி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.