ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல்
டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ள சூழலில், இதனால் பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்கள் தொடர்பாக மத்திய அரசு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. மொத்தம் 28 கப்பல்கள் அங்குச் சிக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. மத்திய கிழக்கில் நடக்கும் இந்த போரால் உலக நாடுகள், குறிப்பாக தெற்காசிய நாடுகள் கடுமையாகப் பாதித்துள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கு இல்லை. இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

மொத்தம் 28 கப்பல்கள்
இந்த போர் காரணமாக இந்தியாவிற்கு எரிசக்திப் பொருட்களை ஏற்றிச் செல்லவிருந்த குறைந்தது 10 கப்பல்கள் வளைகுடாவில் சிக்கியுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தவிர, எல்.பி.ஜி (LPG), கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி (LNG) ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் இந்தியக் கொடியுடன் உள்ள 18 கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையின் மேற்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி மொத்தம் 28 கப்பல்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறது. உலக வர்த்தகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான இந்த ஜலசந்தி, போர் காரணமாகக் கிட்டத்தட்டச் செயலிழந்துள்ளது.
சரக்குகள்
இது தொடர்பான தகவல்களைத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா பகிர்ந்து கொண்டார்.. அவர் கூறுகையில், "இந்தியா நோக்கி வந்த 10 வெளிநாட்டுக் கப்பல்களில், மூன்று அத்தியாவசிய எல்பிஜி கொண்டு வந்தவை நான்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் டேங்கர்கள்.. மூன்று கப்பல்கள் எல்என்ஜி கப்பல்களாகும்.
இந்தியக் கப்பல்களைப் பொறுத்தவரை அந்த 18 கப்பல்களில் மூன்று எல்.பி.ஜி டேங்கர்கள், ஒரு எல்.என்.ஜி கேரியர் மற்றும் நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள் அடங்கும். ஒரு காலி டேங்கர் எல்.பி.ஜி-யால் நிரப்பப்பட்டு வருகிறது. வேறு சில இந்தியக் கப்பல்களும் அங்கி சிக்கியுள்ளன. இந்தக் கப்பல்களில் மொத்தம் 485 மாலுமிகள் உள்ளனர். இப்போது இந்தியக் கப்பல்கள் மற்றும் இந்தியாவிற்கான பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்வதே எங்கள் முன்னுரிமை.
சிக்கல்
ஹார்முஸ் பகுதியில் மட்டும் சிக்கல் எனச் சொல்லிவிட முடியாது. அதன் வெளியே உள்ள பகுதிகளும் உயர் ஆபத்து நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கப்பல் இன்சூரன்ஸ்களும் உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு மொத்த மதிப்பில் 0.04 சதவீதமாக இருந்த பிரீமியங்கள் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளன. சில குறிப்பிட்ட கப்பல்களில் இந்த காப்பீட்டு மதிப்பு 0.7 சதவீதமாகக் கூட உயர்ந்துள்ளது. இது இன்னுமே கூட உயரலாம்" என்றார்.
இதுவரை 8 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. அதில் பெரும்பாலான கப்பல்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டன. சில கப்பல்கள் மெல்ல இந்தியாவை நோக்கி வருகிறது.
அடுத்த திட்டம்
இந்தியாவுக்கு வந்து சரக்குகளை இறக்கிவிட்ட கப்பல்கள் மீண்டும் வளைகுடாவுக்குச் சரக்குகளை ஏற்றி வர அனுப்பப்பட்டுமா என்ற கேள்விக்கு சின்ஹா, "இந்தியக் கப்பல்களை அங்கிருந்து பாதுகாப்பா வெளியேற்றுவதே இப்போது எங்கள் முதல் முன்னுரிமை... கப்பல்களை மீண்டும் சரக்குகளை நிரப்பி வர வளைகுடாவுக்கு அனுப்புவது குறித்து நாங்கள் எந்தவொரு ஆலோசனையையும் நடத்தவில்லை" என்றார்.
இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் பெரும்பாலானவற்றை இறக்குமதியையே சார்ந்துள்ளது. இந்தியாவின் சுமார் 40 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீதத்திற்கும் அதிகமான எல்.என்.ஜி இறக்குமதிகள் மற்றும் 90 சதவீத எல்.பி.ஜி இறக்குமதிகள் ஹார்முஸ் வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications