87 பில்லியன் டாலர்! இது சீரியஸான மேட்டர்! இஸ்லாமிய நாடுகளால் இந்தியாவிற்கு வந்த சிக்கல்! என்ன ஆகும்?
டெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருவதாக இஸ்லாமிய நாடுகள் புகார் வைத்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகளின் இந்த புகார் காரணமாக இரண்டு தரப்பு உறவு பாதிப்படையும் அபாயம் உள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவரின் பேச்சு உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
Recommended Video

கத்தார் கண்டனம்
இவரின் பேச்சை கத்தார் கடுமையாக விமர்சனம் செய்தது. கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது.. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து இந்தியா சார்பிலும், அது அரசின் அதிகாரபூர்வ கருத்து கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

கத்தார் ஈரான் குவைத்
கத்தார் மட்டுமின்றி இந்தியாவை ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்திய தரப்பில் இருந்து விளக்கம், நடவடிக்கை ஆகியவை தேவை என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த மோதல் காரணமாக இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் உறவு பாதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா ஜிசிசி எனப்படும் Gulf Cooperation Council (GCC) உடன் மிக அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளுடன் இந்த வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.

வர்த்தகம்
இந்த ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகம் என்பது 87 பில்லியன் டாலர் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த வர்த்தகம் உயர்ந்து வருகிறது. அதோடு கத்தார் உள்ளிட்ட நாடுகளில் கேரளாவை சேர்ந்த 35 லட்சம் பேர் உட்பட பல லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இந்தியாவின் டாப் எண்ணெய் இறக்குமதி தேவையை பூர்த்தி செய்வது இந்த ஜிசிசி நாடுகள்தான். இதனால்தான் 2014ல் இருந்து பிரதமர் மோடி அடிக்கடி ஜிசிசி நாடுகளுக்கு சென்று சந்திப்பு நடத்தி வருகிறார். யுஏஇ உடன் இந்தியா free trade agreement செய்தது கூட இதற்குத்தான்.

உறவு முக்கியம்
அதோடு இரு தரப்பு உறவை பறைசாற்றும் விதமாக அபு தாபியில் 2018ல் கட்டப்பட்ட இந்து கோவிலின் திறப்பு விழாவிற்கு கூட சென்று வந்தார். அந்த அளவிற்கு இந்தியா - இஸ்லாமிய நாடுகள் இடையே உறவு உள்ளது. ஆனால் இப்போது ஏற்பட்ட இருக்கும் பிரச்சனை காரணமாக ஜிசிசி - இந்தியா இடையிலான உறவை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வெளியுறவுத்துறை இருக்கிறது. பல மில்லியன் டாலர் வர்த்தகம் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஜிதேந்தர் நாத் மிஸ்ரா பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

இக்கட்டான நிலை
அதேபோல் இந்தியா மிக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. மேலிட தலைவர்களின் சந்திப்புகள், அவர்களின் முயற்சிகள் மட்டுமே பிரச்சனையை சரி செய்ய உதவும். மிகவும் சீரியசான விஷயம் இது என்று முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி அணில் ட்ரிங்குனாயத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவில் பிரச்சனை ஏற்பட்டால் அது இந்தியாவைத்தான் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுவாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் கருத்து தெரிவித்தால் அதை இந்தியா கடுமையாக எதிர்க்கும்.

இறங்கி போன இந்தியா
மாறாக இந்தியா இந்த முறை கிட்டத்தட்ட சரண் அடைந்தது போல் இறங்கி சென்றுள்ளது. இந்தியா இப்படி இறங்கி செல்வதற்கு காரணம் , பிரச்சனை கையை மீறி போனதால்தான். ஜிசிசி நாடுகளுடன் உறவை சேதப்படுத்த இந்தியா நினைக்கவில்லை. இதனால்தான் இந்தியா இறங்கி போய் உள்ளது என்றும் வெளியுறவுத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தை இஸ்லாமிய நாடுகளும் அவ்வளவு லேசில் விடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசில் விடாது
அதன்படி அரபு நாடுகளில் இருக்கும் மக்கள் இந்தியாவின் நிலவும் இஸ்லாமிய வெறுப்பை விரும்பவில்லை. பணக்கார ஷேக்குகள் பலர், இந்தியாவில் நிலவும் இந்த விஷயங்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். தங்கள் நாட்டு அரசும் இந்தியாவை கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஜிசிசி நாடுகளில் செய்தி சேனல்கள் முழுக்க இந்திய எதிர்ப்பு கருத்துக்களே நிரம்பி வழிகின்றன, இதனால் ஜிசிசி நாடுகளும் கண்டிப்பாக இந்தியாவை தொடர்ந்து எதிர்க்கும்.. இதை இந்தியா கவனமாக சமாளிக்க வேண்டும் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications