ரஷ்ய ஆயில் கூடாது.. நிர்பந்திக்கும் அமெரிக்கா.. அதெல்லாம் இந்தியா இஷ்டம்.. மத்திய அமைச்சர் பதிலடி
டெல்லி: "இந்தியா எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்கும்" என்று மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை மறைமுகமாக நிர்பந்தித்து வரும் நிலையில், அமைச்சர் ஹர்தீப் சிங்கின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், அமெரிக்காவுக்கே சென்று அந்நாட்டை மறைமுகமாக சாடும் வகையில் அவர் இதுபோல் பேசியிருப்பது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொருளாதாரத் தடையும் பாதிப்பும்..
தனது எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. இந்தப் பொருளதாரத் தடைகள் ரஷ்யா மட்டுமின்றி பெரும்பாலான உலக நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பல நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அமெரிக்கா மீதான அச்சத்தின் காரணமாக அந்நாடுகள் ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளன.

மிரட்டலுக்கு பணியாத இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுாக நிறுத்தியதால், பல நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் இந்தியா தனியொரு நிலைப்பாடை வைத்திருந்தது. உக்ரைனை போரை எதிர்த்த போதிலும், ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா கைவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், ரஷ்யாவிடம் இருந்து முன்னெப்போதும் இருந்ததை விட அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

அமெரிக்கா அதிருப்தி
இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா உடனான வர்த்தகத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா சார்பில் இந்திய அரசுக்கு பல முறை அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. அமெரிக்காவுக்கு முன்பாகவே ரஷ்யா - இந்தியா நட்புறவு இருந்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உலகம் முழுவதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ரஷ்யாவிடம் இருந்தும் கச்சா எண்ணெய்யை வாங்காவிட்டால் அது இந்தியாவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

தொடர்ந்து வாங்குவோம் - இந்தியா அதிரடி
இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அந்நாட்டு பெட்ரோலிய நலத்துறை அமைச்சர் ஜெனிஃபர் கிரான்ஹோல்மை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகள், பெட்ரோல் மற்றும் எரிவாயு துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு அங்கிருந்த செய்தியாளர்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங், "இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டில் இதுபோன்ற விவாதங்கள் வரக்கூடாது. கோடிக்கணக்கான மக்களுக்கு தடையின்றி பெட்ரோல் - டீசலை வழங்க வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். எனவே எங்கிருந்தெல்லாம் கச்சா எண்ணெய் வாங்க முடியுமா, அங்கிருந்தெல்லாம் இந்தியா நிச்சயம் வாங்கும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவிடம் எந்த நாடும் கூறவில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications