கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து தாக்கியதாக வெளியான செய்தி.. இந்திய ராணுவம் மறுப்பு
டெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனப் படைகள் இடையே, மோதல் நடைபெற்றதாக ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை இந்திய ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு முதல், சீன ராணுவம், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ஜூன் 15ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றபோது இந்திய ராணுவம் தடுத்தது. இதில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் 11 கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அங்கு பதற்றம் குறைந்துள்ளது. ஆனால் இரு தரப்பிலும் ராணுவம் இன்னும் அங்கு, குவிக்கப்பட்டுள்ளது.

எல்லையை கடந்த சீன ராணுவம் என செய்தி
இந்த நிலையில்தான் சீன ராணுவம், கிழக்கு லடாக்கில் பல இடங்களில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) கடந்து உள்ளே வந்து விட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு மோதல் ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் கால்வான் நதி அருகில்தான் இந்த மோதல் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கூடாரம் அமைத்தபோது மோதல்?
இந்த மோதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. 2020ம் ஆண்டு மோதலைப் போலவே, மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) வீரர்கள் பிபி 14 க்கு அருகிலுள்ள கால்வான் ஆற்றில் உள்ள வளைவில் கூடாரத்தை அமைத்தபோதுதான் இந்த மோதல் ஏற்பட்டது. அந்த கூடாரத்தை அகற்ற இந்திய ராணுவம் வலியுறுத்தியபோது மோதல் ஏற்பட்டது என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்திய ராணுவம் மறுப்பு
இதனிடையே, இந்திய ராணுவம் உடனடியாக இன்று இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த செய்தி அறிக்கையின் நோக்கம் உள்நோக்கத்தோடு கூடியது. எந்தவொரு உண்மையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த ஆண்டு பிப்ரவரியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, ஆக்கிரமிக்க எந்த முயற்சியும் நடைபெறவில்லை.

தொடரும் ரோந்து, பேச்சுவார்த்தைகள்
செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, கால்வானிலோ அல்லது வேறு எந்தப் பகுதியிலோ எந்த மோதல்களும் ஏற்படவில்லை.
இரு தரப்பினரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறோம். அந்தந்த பகுதிகளில் வழக்கமான ரோந்துப் பணிகள் தொடர்கின்றன. பி.எல்.ஏ நடவடிக்கைகள் இந்திய ராணுவத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. செய்தி கட்டுரை உறுதிப்படுத்தப்படாத உண்மைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதை உறுதியாக மறுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் டெப்சாங் போன்ற மோதல் பகுதிகளில் ராணுவ குவிப்பை குறைக்க இரு நாடுகளும் இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை, துஷன்பேவில் சந்திக்கவுள்ள நிலையில் வெளியான இந்த செ்யதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இரு தரப்பு கார்ப்ஸ் கமாண்டர்-ரேங்க் அதிகாரிகளிடையே 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ள இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications