2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது.
டெல்லி: 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக தொடக்க உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதானி குழு பங்கு சரிவு, மோடி - பிபிசி ஆவணப்பட விவகாரம் காரணமாக இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் கூட்டத்தொடராக இருக்க போகிறது.
உச்சகட்ட எதிர்பார்ப்பு.. மோடி 2.O-ன் கடைசி முழு பட்ஜெட்! எப்போது தொடங்கும் நிர்மலா உரை? முழு விவரம்
பட்ஜெட் கூட்டத்தொடர்
நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வறிக்கை
பெருந்தொற்றில் இருந்து இந்தியா வேகமாக மீண்டுள்ளது. பொருளாதார ஜிடிபி வளர்ச்சியானது உள்நாட்டு தேவை மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏப்ரல் 2022 இல் பணவீக்க விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்தது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. உலக அளவில் லே ஆப் தொடங்கி உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான ரிஸ்க் அதிகரித்துள்ளது. இறக்குமதிக்கு டாலரில் பேமெண்ட் செலுத்தப்படும் வேளையில், டாலர் ஆதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும். கணக்குப் பற்றாக்குறை (CAD) தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுதலாகப் பாதிக்கலாம், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இரண்டாவது அமர்வு
இந்த நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நீண்ட தொடராக இருக்க போகிறது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடக்கும். இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும். மொத்தம் இரண்டு அமர்வுகளாக இந்த நீண்ட கூட்டத்தொடர் நடக்க உள்ளது. வரி கட்டுப்பாடு, வருமான வரி குறைப்பு, சாமானியர்களுக்கு சாதகமாக சில அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மாநில தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.
வருமான வரி
வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாக பட்ஜெட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுபோல் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டங்கள் , நாடு முழுக்க இலவச அரிசி, கோதுமை வழங்குவது தொடர்பான திட்டங்கள் இதில் இடம்பெறலாம். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், பிப்ரவரி 2ம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில் அதானி குழும பங்குகள் சரிவு, ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு, எல்ஐசி பங்குகள் சரிவு, மோடி பிபிசி ஆவண பட சர்ச்சை போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரி கோஷம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.