இப்போது இருப்பது தைரியமான அரசு.. முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம்.. ஜனாதிபதி பாராட்டு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 ஐ நீக்கியது, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது போன்று பல முக்கிய முடிவுகளை எடுத்து வலிமையான, அச்சமற்ற அரசாக இந்திய அரசு திகழ்ந்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் முன்னிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்.
இதில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
சுயமாக கட்டமைக்கும் தருணம்
இதில் பேசிய குடியரசுத் தலைவர், "இந்தியா சுயமாக கட்டமைத்துக் கொள்ளும் தருணம் இது. 2047 ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டின் கடந்த கால பெருமைகளுடன் நவீன கால சிறந்த தருணங்களும் இணைக்கப்படும். மக்கள் நலனுக்கான இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும். அம்ரித் காலின் 25 ஆண்டுகாலம் என்பது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது.
இந்தியர்களின் தன்னம்பிக்கை
இன்று ஒவ்வொரு இந்தியனும் அதிகளவிலான தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நம்ப முடியாத அளவிற்கு நம் மீதான உலகின் பார்வை மாறி இருக்கிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக இருக்கும் இந்தியா உருவாக இளைஞர்களும், பெண்களும் முன் வரிசையில் நிற்க வேண்டும். அவர்கள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பாதையை காட்ட வேண்டும்.
இந்தியாவின் இளைஞர்கள்
இந்தியாவின் இளைஞர்கள் காலத்தை விட 2 அடி முன்னாள் உள்ளார்கள். சுய சார்பு கொண்ட இந்தியாவை நாம் உருவாக்கிட வேண்டும். இன்று நாட்டில் நிலையான, துணிச்சலான, தீர்க்கமான அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. பெரும் பெரும் கனவுகளை நனவாக்கிடும் வகையில் அது செயல்பட்டு வருகிறது. உலகிற்கே பல விசயங்களில் இந்தியா தீர்வு அளித்து வருகிறது.
முத்தலாக், ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம்
ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான ஆர்கிள் 370 ஐ நீக்கியது, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது போன்று பல முக்கிய முடிவுகளை எனது அரசாங்கம் எடுத்து இருக்கிறது. ஊழலை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் காரணமாக 11 கோடி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி கிடைத்து உள்ளது.
ஏழைகளுக்கு உதவி
ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர், மின் இணைப்பு, குடிநீர், இருப்பிடத்தை வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்தார்கள். ஆனால், இந்தியா ஏழைகளை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எந்த ஏழையும் பசியோடு உறங்கக்கூடாது என்று பல முயற்சிகளை மேற்கொண்டது.
சர்ஜிகல் ஸ்ட்ரைக்
கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் உணவை தடையின்றி பெற்று வருகிறார்கள். சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான எதிர்வினையை இந்தியா கொடுத்தது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வலுவான தாக்குதலை நடத்தியது.
மாறிய இந்தியாவின் நிலை
அரசியல் நிலையற்ற தன்மையால் பல நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படும் நிலையில், இந்தியா மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் இருக்கிறது. தனது பிரச்சனைகளை தீர்க்க இந்தியா மற்ற நாடுகளை இனி சார்ந்து இருக்காது. அதே நேரம் மற்ற நாடுகள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை நாடுகின்றன." என்றார்.