நீட் பிஜி ஒத்திவைக்கப்படுமா? நெருக்கும் இந்திய மருத்துவர் சங்கம் - மத்திய அமைச்சருக்கு பறந்த கடிதம்
டெல்லி: இந்த ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என இளங்கலை மருத்துவ மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம்.. சமஸ்கிருதத்தில் அல்ல.. மதுரை மருத்துவ மாணவர்கள் விளக்கம்
நீட் தேர்வு விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் வைத்திருந்தார். இதனால், தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைப்பது சிக்கலாக இருந்து வந்தது. இந்த நிலையில், மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 21 ஆம் தேதி நீட் பிஜி தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டு இளங்கலை நீட் தேர்வு வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதேபோல் முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி இளங்கலை மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினர்.
மாணவர்கள் குமுறல்
2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து இந்திய கலந்தாய்வும் 2022 முதுகலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பது நடுத்தர மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாதிக்கும் என்பது மாணவர்களின் கருத்தாக உள்ளது. முதுகலை நீட் தேர்வுக்கு தயாராகி வரும் தங்களின் சுமையை உணர்ந்து தேர்வு தேதியை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், 2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து இந்திய கலந்தாய்வு நடைபெறும் நாளுக்கும் 2022 முதுகலை நீட் தேர்வு நடக்கும் நாட்களுக்கும் இடையே போதிய இடைவெளியை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்திய மருத்துவர் சங்கம் கடிதம்
இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம் எழுதி இருக்கிறது. மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வுக்கும் நீட் தேர்வுக்கும் இடையே மிகக்குறைவான கால இடைவெளியே இருப்பதாக் மாணவர்களால் தேர்வுக்கு தயாராக முடியாது என இந்திய மருத்துவர் சங்கம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.