லோயர் பெர்த் பிரச்சனை.. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்! ரயில்வே சூப்பர் அறிவிப்பு
டெல்லி: ரயில் பயணங்களில் நீண்ட தூர பயணம் மற்றும் இரவு நேர பயணங்களில் பெண்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு லோயர் பர்த் எனப்படும் கீழ்படுக்கை கிடைப்பது மிகுந்த சிரமமாக மாறியுள்ளது. இந்த நிலையில் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மேற்கண்ட தரப்பினருக்கு தானாகவே லோயர் பெர்த் ஒதுக்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மதிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்திய ரயில்வே துறை உலகிலேயே மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பாதுகாப்பாகவும் குறைந்த செலவில் பயணம் செய்ய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் வருகையால் ரயில்வே பயணம் மேலும் வேகமானதாகவும் வசதியானதாகவும் மாறியுள்ளதால், பெரும்பான்மையான பயணிகள் இதனையே விரும்புகின்றனர்.

இந்திய ரயில்வே
இந்நிலையில்,ரயில் பயணத்தில் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கீழ் படுக்கையை ( லோயர் பெர்த்) பெறுவது பெரும்பாலும் சிரமமாக இருக்கும். குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு பயண வசதிகள் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக பல முறை புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையை சரிசெய்ய மத்திய ரயில்வே துறை புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
லோயர் பெர்த்
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் பயணத்தில் கீழ்படுக்கை வசதி குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு முன்னுரிமையாக வழங்கப்படும் எனவும், கீழ்படுக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்யும்போது இருவரும் (மேல்பெர்த் / லோயர் பெர்த்) போன்ற விருப்பங்களை தெரிவிக்காவிட்டாலும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு தானாகவே லோயர் பெர்த் வழங்கப்படும்.
கர்ப்பிணி பெண்கள்
அதேபோல், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கீழ் படுக்கை வசதி முன்னுரிமையாக ஒதுக்கப்படும். இதற்காக ஸ்லீப்பர் பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஆறு முதல் ஏழு லோயர் பெர்த்களும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜ்தானி, சதாப்தி உட்பட அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் இது நடைமுறையில் இருக்கும்.
ரயில்வே
கீழ்படுக்கைகள் காலியாக இருந்தால் மற்ற பெர்த்களில் பயணம் செய்பவர்களிலிருந்து முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அந்த இடங்கள் மாற்றி வழங்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்லீப்பர், 3-டி ஏசி, 2-டி ஏசி ஆகிய பெட்டிகளில் தலா நான்கு இடங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் சிரமமின்றி பயணம் செய்ய தனிப்பட்ட கதவு அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சக்கரநாற்காலியை நிறுத்தும் வசதி, அகலமான பாதைகள், அவர்களுக்கேற்ற கழிப்பறைகள் போன்றவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
அம்ரித் பாரத் ரயில்
பார்வை குறைபாடு உள்ள பயணிகளுக்காக ப்ரெயில் எழுத்துகளுடன் கூடிய அறிவிப்புப்பலகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் ரயில்கள், வந்தே பாரத் ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய நடைமுறைகள் அறிமுகமாகியுள்ள நிலையில், ரயில் பயணத்தில் சிரமம் குறிப்பாக குறையும் என ரயில்வே நம்புகிறது. மத்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பு பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்தை உறுதி செய்யும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications