"இனி ரயில் உணவுகள் மோசமாக இருக்காது.." புது பிளானை கையில் எடுக்கும் ரயில்வே.. இது சூப்பர் திட்டம்
டெல்லி: நமது நாட்டில் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இந்த குறையை போக்கவும் பயணிகளுக்குச் சிறந்த உணவு கேட்டரிங் சேவையை வழங்கவும் இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ரயில் பயணங்களின் போது உணவை கையோடு எடுத்துச் செல்ல முடியாத பயணிகள், பொதுவாக ரயிலிலேயே உணவுகளை வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் ரயில் உணவுகள் எப்படி இருக்கும் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.

ரயில் உணவுகள்: ரயில்களில் கிடைக்கும் உணவு பொதுவாக 2 டைப் இருக்கும். ஒன்று ரயில்களிலேயே இருக்கும் பேண்ட்ரி கார்களில் (அதாவது ரயிலில் உணவு சமைக்க இருக்கும் பெட்டிகள்) செய்யப்படும் உணவுகள். இது சுடசுட இருப்பதால் டேஸ்ட் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். இரண்டாவது ரயில் நிலையங்களில் செய்யப்பட்டு ரயில்களில் விற்கப்படும் உணவுகள். இதன் பல நேரங்களில் ஆறி போய் மிக மோசமான நிலையில் தான் இருக்கும்.
இந்தச் சிக்கலைச் சரி செய்யவே தேவைக்கேற்ப அனைத்து ரயில்களிலும் பேண்ட்ரி கார்களில் உணவுகளைத் தயாரிப்பது குறித்து இந்தியன் ரயில்வே ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதற்காக சுமார் 110 பேண்ட்ரி கார்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.. தற்போது வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி, தேஜஸ் போன்ற பிரீமியம் ரயில்கள் பேண்ட்ரி கார்கள் உள்ளன. அதேநேரம் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் சிலவற்றில் மட்டுமே பேண்ட்ரி கார்கள் உள்ளன. இந்த ரயில்களில் இருப்போர் உணவு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
பேண்ட்ரி கார்கள்: அதேநேரம் பெரும்பாலான சூப்பர் ஃபாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பேண்ட்ரி கார்கள் இருப்பதில்லை. ஹோலி, தீபாவளி உள்ளிட்ட விடுமுறைக் காலங்களில் மட்டும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் இதை நிலை தான், பேண்டரி கார்கள் இருப்பதில்லை.. இதனால் இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை வாங்கச் சிரமப்படுகிறார்கள்.
ரயில்வே தரும் உணவுகள் இல்லாததால்.. அங்கு உணவு விற்கும் மற்றவர்களிடம் இருந்து உணவுகளை வாங்குகிறார்கள். உரிய அனுமதியின்றி உணவை விற்கும் அவர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து உணவு வாங்கி சாப்பிட வேண்டிய சூழல் இருக்கிறது.
110 பேண்ட்ரி கார்கள்: இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 110 பேண்ட்ரி கார்களை உருவாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. 2024-25 ஆண்டில், சுமார் 55 பேண்ட்ரி கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேபோல 2025-26 ஆண்டில் 55 பேண்ட்ரி கார்களை உற்பத்தி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் பேண்ட்ரி கார்கள் நிறுவப்படும்.
பிளான் என்ன: அதேநேரம் அனைத்து சிறப்பு ரயிலிலும் பேண்ட்ரி கார்களை நிறுவுவது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இயக்கப்படும் ரயில்களில் பேண்ட்ரி கார்களை இணைப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் மட்டும் இயக்கப்படும் ரயில்களுக்கு பேண்ட்ரி கார்களை இணைக்க வாய்ப்பு இல்லை.
அந்த ரயில்களில் பயணிப்போர் உணவுகளை வாங்க ஏதுவாக ஸ்டேஷன்களில் ரயில் பெட்டிகளுக்கு மிக அருகே விற்பனையாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications