பாகிஸ்தான் சகவாசம்.. துருக்கியை தூக்கி எறியும் இந்தியர்கள்! அதோ கதி அஜர்பைஜான்! Make my trip அதிரடி!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் துருக்கி, அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு செல்லும் முன்பதிவுகள் 60% குறைந்துள்ளதாகவும், ஏற்கனவே புக் செய்தவர்கள் ரத்து செய்வது 250 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மேக் மை ட்ரிப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இரு நாடுகள் தொடர்பான சுற்றுலா விளம்பரங்களை தங்கள் இணையதளத்திலிருந்து நீக்கி உள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்த ராணுவ நடவடிக்கை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் பின்னணியில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அணிவகுத்தன. ஆனால் பாகிஸ்தானுக்கு சீனா மறைமுகமாக உதவியது. அதே நேரத்தில் துருக்கி, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் நேரடி ஆதரவு தெரிவித்தன.

குறிப்பாக பாகிஸ்தான் பக்கம் நேரடியாக நின்ற துருக்கி சோங்கர் வகை ட்ரோன்களை வழங்கியது. அந்த ட்ரோன்களை பயன்படுத்தி தான் பாகிஸ்தான் இந்தியாவை தாக்க முயன்றது. இதை அடுத்து துருக்கிக்கு எதிராக திரும்பி உள்ளனர் இந்தியர்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு துருக்கியில் பெரும் பூகம்பம் ஏற்பட்ட நிலையில் சின்னாபின்னமானது அந்த நாடு. அப்போது ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்தியா உதவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2024 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் ஐந்து கோடி இந்திய சுற்றுலாப் பயணிகள் அஜர்பைஜானுக்கும் துருக்கிக்கும் சென்றிருந்தனர். தற்போது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக துருக்கியையும் அஜர்பைஜானையும் இந்தியர்கள் புறக்கணித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் வலுத்து வருகிறது. ஏற்கனவே இந்திய சந்தைகளில் விற்பனையாகி வந்த துருக்கி ஆப்பிள்களை பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக புறக்கணிப்பதாக வணிகர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
மேலும், 4000 கோடிக்கு மேல் கடந்த ஆண்டு இந்தியர்களின் சுற்றுலா பயணம் காரணமாக துருக்கியும் அஜர்பைஜானும் பணம் பார்த்த நிலையில், அந்நாட்டின் சுற்றுலா உணவகங்கள், விமான போக்குவரத்து ஆகியவை பலன் பெற்றன. ஆனால் இந்தியர்கள் கொல்லப்பட்ட பிறகு அந்த நாடுகள் பாகிஸ்தானுடன் இருக்கின்றன. தயவுசெய்து இந்த இரண்டு இடங்களை புறக்கணித்துவிட்டு இந்தியாவில் உள்ள அழகான இடங்களை பார்க்க வேண்டும் என தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா கூறியிருந்தார்.
இந்த நிலையில் துருக்கி அஜர்பைஜானுக்கு மேற்கொள்ள இருந்த பயணங்களை இந்தியர்கள் அதிரடியாக ரத்து செய்து இருக்கின்றனர். இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ள மேக் மை ட்ரிப் நிறுவனம், "கடந்த ஒரு வாரமாக அஜர்பைஜான் மற்றும் துருக்கி சுற்றுலா பயணங்களுக்கான முன்பதிவு 60 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. மேலும் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் பயணிக்க திட்டமிட்டு இருந்தவர்கள் ரத்து செய்யும் சதவீதம் 250 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்தியர்களின் இந்த முடிவை தேசத்தின் ஒற்றுமை மற்றும் இந்திய ராணுவத்தின் மீதான மரியாதையின் காரணமாக முழுமையாக ஆதரிக்கிறோம். துருக்கி அஜர்பைஜானுக்கு தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். இரு நாடுகள் தொடர்பான சுற்றுலா சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மேக் மை ட்ரிப் தளத்திலிருந்து நீக்கி இருக்கிறோம் எனக் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இந்தியர்கள் முழு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications