ஆங்கிலம் பேசுவோர் தலை குனியும் காலம் வரும்.. டெல்லியில் பற்ற வைத்த அமித் ஷா!
டெல்லி: இந்தியாவில் ஆங்கில மொழியில் பேசுவோர் வெட்கி தலை குனியும் காலம் விரைவில் வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் எந்த வெளிநாட்டு மொழியும் போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ள அமித் ஷா, அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலமாக முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்கள் அனைவரும் 3வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்று தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜகவினர், திமுக ஆங்கில மொழியை வளர்ப்பதாக குற்றம்சாட்டியது.

புத்தக வெளியீட்டு விழா
இதன்பின் தமிழ்நாட்டில் மொழி குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் நாள் விரைவில் வரும் என்று பேசி இருக்கிறார். டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஷுதோஷ் அக்னிஹோத்ரி எழுதியுள்ள புத்திய வெளியீட்டு விழாவில் அமித் ஷா கலந்து கொண்டார்.
ஆங்கிலம் பற்றி அமித் ஷா
அதில் அமித் ஷா பேசுகையில், இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியொரு சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்தான் நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். இந்தியாவில் உள்ள மொழிகள் தான் நம் கலாச்சாரத்திற்கு ஆபரணங்களை போன்றது. மொழிகள் இல்லாமல் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது.
முழுமையான இந்தியா
ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியில் நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அரைகுறைவான வெளிநாட்டு மொழியால் நாம் ஒருபோதும் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்வதன் தீவிரத்தன்மையை நன்றாக அறிந்துள்ளேன்.
2047 இலக்கு
இந்த யுத்தம் அவ்வளவு எளிதாக இருக்காது என்பதையும் அறிவேன். ஆனால் இந்திய சமூகம் வெற்றிகரமாக இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சொந்த மொழியில் சுயமரியாதையுடன் இந்த நாட்டையும், உலகையும் வழிநடத்துவோம். 20247ல் இந்தியா வளர்ச்சி அடைந்த ஒரு நாடாக இருப்பதற்கு, நமது மொழிகள் முக்கிய அங்கமாக இருக்கும்.
இலக்கியமே ஆன்மா
அரசு நிர்வாகத்தில் இன்னும் சில நடைமுறைகள் காலனித்துவ கால சிந்தனைகளை பிரதிபலித்து வருகின்றன. இலக்கியம் தான் இந்திய சமுதாயத்தின் ஆன்மாவாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இலக்கியம்தான் மதம், சுதந்திரம், கலாச்சாரத்தை பேசியது. மதம், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை யாராவது தொட முயற்சித்தால், நமது சமூகம் மொத்தமாக அவர்களை எதிர்த்து நின்று இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications