உக்ரைன், ரஷ்யா நாட்டு தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி.. இதுதான் ராஜதந்திரம்.. மிகப்பெரிய மெசேஜ்!
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நடத்திய சந்திப்புகள் உலக அரங்கில் இந்தியாவை ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது. உலக அளவில் இந்தியாவின் நிலைப்பாடுகள், உலக அரசியல் முன்னெடுப்புகள் கவனம் பெற்றுள்ளன.
பெரும்பாலான உலகத் தலைவர்கள் மற்றும் உலக நாடுகள் உக்ரைனின் பக்கம் நின்று, ரஷ்யாவை ஆக்கிரமிப்பு செய்யும் நாடு என்று கூறி விமர்சனம் செய்தது . ரஷ்யாவை கண்டித்ததோடு சில நாடுகள் ரஷ்யாவுடன் உறவை கூட துண்டித்தது. ஆனால் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் காரணமாக இரண்டு நாடுகளுடனும் இந்தியா நட்பு பாராட்டி அதன் வரலாற்று உறவுகள் முறியாமல் பார்த்துக்கொண்டது. இந்தியாவின் நலன், சர்வதேச நலனை மனதில் வைத்து பிரதமர் மோடி முறையாக காய் நகர்த்தியதால் இந்த விவகாரத்தில் இந்திய மிகப்பெரிய அமைதியின் தூதுவராக உருவெடுத்து உள்ளது.

மோடியின் ராஜதந்திரத்தின் முக்கியத்துவம்:
புடின் மற்றும் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட சந்திப்புகள்.. சாதாரண சந்திப்புகள் கிடையாது. முக்கியமான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அதி அவசியமான சந்திப்புகள் ஆகும். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டத்தில் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. உலகளாவிய சமூகம் பெருமளவில் இதை உற்றுநோக்கும் நேரத்தில்தான் மோடி அசால்ட்டாக இரண்டு நாட்டு தலைவர்களை சந்தித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்கு நேர்மாறாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்தும் எண்ணெய் வாங்குகிறது.. உக்ரைனுடனும் நெருக்கமாக இருக்கிறது. இரண்டு தரப்பையும் பகைத்துக்கொள்ளாமல் இந்தியா இரண்டு தரப்பிற்கும் நடுவில் நின்று காய் நகர்த்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரையும் சந்திப்பது வெறும் ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல. இரண்டு நாட்டு மோதலில் இந்தியா அமைதியின் தூதுவராக இதன் மூலம் உருவெடுத்து உள்ளது.
இரு நாட்டு தலைவர்களையும் சந்திப்பதன் மூலம், இந்தியாவின் நீண்டகால அணிசேராக் கொள்கையை மீண்டும் உறுதி செய்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மோடி வெளிக்காட்டி இருக்கிறார். உலகில் வேறு எந்த நாடும்.. வளர்ந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொள்ளும் யாராலும் செய்ய முடியாத இந்த சாதனையை பிரதமர் மோடி செய்துள்ளார். இந்த நடவடிக்கை இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பாதுகாப்பிற்கு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட உலகப்போருக்கான் சாத்தியத்தை மோடி தனி ஆளாக அணைபோட்டு தடுத்துக்கொண்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான உறவை ஒரே நேரத்தில் சமாளிப்பது:
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பனிப்போரின் போது, சோவியத் யூனியன் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. ராணுவ ஆதரவையும் ராஜதந்திர ஆதரவையும் வழங்கியது. இன்று, ரஷ்யா இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக உள்ளது, குறிப்பாக பாதுகாப்பு துறையில், இந்தியா ரஷ்ய ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பெரிதும் நம்பியுள்ளது.
அதே நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் வலுவான உறவை பேணி வருகிறது, குறிப்பாக வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா அமெரிக்கா நெருக்கமாக உள்ளது. இரண்டு நாடுகளுடனும் இந்தியா நெருக்கமாக இருந்து.. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை இந்தியா சாதித்து வருகிறது.
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் உறவுகளைப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பிரதமர் மோடியின் திறமையே காரணம். மோடியின் குறிப்பிடத்தக்க ராஜதந்திர திட்டமிடல்தான் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் அதே வேளையில், அமெரிக்காவுடன் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டுறவை விரிவுபடுத்தியுள்ளது. எந்த உலக நாடும் இப்படி ஒரு நடுநிலையான உறவை கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ராஜதந்திரமும் - யுரேஷியா, ஐரோப்பா உலக அரசியலும்
ரஷ்யா, உக்ரைன் உடன் இந்தியா நெருக்கமாக இருப்பது.. ஆசிய அரசியலில் மட்டுமன்றி யுரேஷியா, ஐரோப்பா அரசியலிலும் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக யுரேஷியாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது யுரேஷியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுகிறது. சர்வதேச அளவில் அதிகாரத்திற்கு நடக்கும் போட்டியில் இந்தியா முறையாக காய் நகர்த்தி துணிச்சலாக நடைபோட்டு வருகிறது.
அதே சமயம் ஐரோப்பாவிலும் இந்தியாவின் நிலைப்பாடு கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு மோடி சென்றது.. அந்த நாட்டின் இறையாண்மையுடன் இந்தியா துணை நிற்கிறது என்பதை உணர்த்தி உள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவிலும் இந்தியாவின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது உள்ளது. இதன் மூலம் ரஷ்யா, உக்ரைன் என்று இரண்டிற்கும் ஆதரவு கொடுத்து.. யுரேஷியா, ஐரோப்பா என்று இரண்டு தரப்பிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது. மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக.. இக்கட்டான ஒரு நேரத்தில் சர்வதேச அரசியலை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு பாடமாக பிரதமர் மோடியின் இந்த ராஜேந்திர நடவடிக்கை அமைந்துள்ளது.
உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்த பாடம்:
பிரதமர் மோடியின் கீழ் இந்தியா மேற்கொள்ளும் இந்த ராஜதந்திர நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. முதலாவதாக, இந்தியா சர்வதேச அழுத்தங்கள் எதற்கும் அடிபணியாமல் தன்னிச்சையாக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உலகின் எந்த அதிகாரத்திற்கும் அடிபணியாத ஆளுமையை இந்தியா வெளிப்படுத்தி உள்ளது.
இரண்டாவதாக, அகிம்சை மற்றும் பேச்சுவார்த்தை முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா எடுத்துரைத்து உள்ளது. மோதலை விட அமைதியே முக்கியம் என்பதை இந்தியாவின் நிலைப்பாடு உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.
பிரதமர் மோடிக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு:
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பான வரவேற்பு இதுவரை எந்த நாட்டு தலைவருக்கும் கிடைக்காதது. குறிப்பாக தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால் மோடிக்கு கிடைத்த வரவேற்பு வேறு யாருக்கும் கிடைக்காதது. இரு நாடுகளும் இந்தியாவின் தலைமையின் மீது கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கையை இது காட்டுகிறது. இரண்டு நாட்டு தரப்புகளுக்கு இடையே பாலமாக செயல்படும் திறனை இந்தியா இதன் மூலம் பிரதிபலிக்கிறது. இந்த வரவேற்பு மோடியின் ராஜதந்திர திறமைக்கு மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கும் ஒரு சான்றாகும்.
அகிம்சையில் இந்தியாவின் உறுதிப்பாடு:
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் இதயம் என்பதே அகிம்சை ஆகும், இது மகாத்மா காந்தியின் கொள்கையாகும். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், நட்பு பாராட்டுவதன் மூலம் அகிம்சை எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் மோடி உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது. உலக மோதலுக்கு இடையே.. இந்தியா அமைதிக்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருவது பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மோடியின் ராஜதந்திரம்.. அகிம்சைக்கான முன்னெடுப்பு இந்தியாவை உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக முன்னெடுத்து உள்ளது.












Click it and Unblock the Notifications