நெகிழ்ச்சி! இதயத்தை ஏந்தி சென்ற இண்டிகோ விமானம்.. குஜராத் டூ மும்பை வெறும் 2.5 மணி நேரத்தில்!
டெல்லி: உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், மகாராஷ்டிராவில் நடந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
உடல் உறுப்பு தானம் என்பது சர்வதேச அளவில் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உடல் உறுப்பு தானம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விலைமதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்ற முடிகிறது.
புடினுடன் டாய்லெட்டுக்கு போன 6 பேர்? அப்படியே
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும் கூட இது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும்போது, அவை மிக விரைவாக தானம் பெறுவோருக்குப் பொருத்தப்பட வேண்டும். இதற்கு தானம் செய்யப்படும் உறுப்புகள் சரியான நேரத்தில் சரியான இடத்திற்குச் சென்று அடைய வேண்டியது முக்கியம். இதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு இயந்திரங்கள் கூட உதவி உள்ளன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
2.25 மணி நேரம்
நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ கடந்த வாரம் வெறும் 2.5 மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட்ட இதயத்தை வதோதராவில் இருந்து மும்பைக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றுள்ளது. இண்டிகோ குழு வதோதராவில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் இருந்து மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனைகளுக்கு வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களில் இதயத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர். ஒரு உயிருள்ள உறுப்பை அதிகபட்சம் மூன்று மணிநேரம் வரை வெளியே வைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி
குளோபல் ஹாஸ்பிடல்ஸில் இருந்த மருத்துவக் குழு வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இதயத்தை எடுத்துள்ளனர். அது 2.5 மணி நேரத்தில் மும்பை எடுத்துச் செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு வைத்து அந்த இதயம் தானம் பெறுபவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்காகத் தனது குழுவினரை இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா பாராட்டி உள்ளார்.
நன்றி
இது குறித்து அவர் கூறுகையில், "இதயம் சரியான நேரத்தில் தானம் பெறுபவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக குளோபல் மருத்துவமனைகளின் குழுவுக்கு நன்றி தெரித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. வதோதரா மற்றும் மும்பையில் உள்ள எங்கள் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இந்த முயற்சிக்குப் பங்களித்த பணியாளர்களை வாழ்த்த விரும்புகிறேன்," என்றார்.
முதல்முறை இல்லை
அதேபோல குளோபல் மருத்துவமனை சார்பிலும் இண்டிகோ குழுவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு உடல் உறுப்புகளைப் பாதுகாப்பாக மற்றும் விரைவாக எடுத்துச் சென்ற இண்டிகோவுக்கு நன்றி தெரிவித்துள்ள மருத்துவனை நிர்வாகம் இதுபோன்ற உதவிகளுக்கு இன்டிகோ குழு எப்போதும் தயாராக இருப்பதாகவும் இதற்காகவே மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. கடந்த மாதம், புனேவில் இருந்து ஹைதராபாத்திற்கு இதுபோல நுரையீரல் வெற்றிகரமாக எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.