தனது கழிவறையை தானே சுத்தம் செய்யும் நாராயண மூர்த்தி! அதுக்கு இப்படியொரு காரணமா! அடடே என்ன மனுஷன்
டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தனது கழிவறையைத் தானே சுத்தம் செய்வது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை நிறுவியவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி.. ஐடி துறையில் சர்வதேச அளவில் இந்தியா அடைந்த பாய்ச்சலுக்கு இன்ஃபோசிஸ் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

இப்போது நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட அவரது இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்னும் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாகச் சிறப்பாகவே இயங்கி வருகிறது.
நாராயண மூர்த்தி: இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பல செயல்கள் எப்போதும் செய்திகளில் இடம்பெறும். அப்படிதான் சமீபத்தில் அவர் எகானமி கிளாஸில் பயணித்தது கூட இணையத்தில் டிரெண்டானது. மேலும், எப்போதும் எளிமைக்குப் பெயர்போன இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி தனது கழிப்பறைகளைத் தானே சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
இது குறித்து சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து தனது பேரக்குழந்தைகளும் தன்னிடம் கேட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு அவர் அளித்த விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
என்ன காரணம்: இது குறித்துப் பேசிய அவர், "மற்றவர்களை மதிக்க இதுவே சிறந்த வழிகள் என்பதை நான் என் பேரக்குழந்தைகளுக்கு அன்பாகவும் விளக்குவேன். நமது சமூகத்தில், தங்கள் கழிப்பறையைச் சொந்தமாகச் சுத்தம் செய்பவர்களைக் கேவலமாகப் பார்க்கும் போக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே சமூகத்தில் நமக்குக் கீழ் யாரும் இல்லை என்று நான் எனது குழந்தைகளிடம் சொல்வேன்..
என் பேரக்குழந்தைகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் சுற்றி நடப்பதைக் கவனிக்கிறார்கள்.. நிறையக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் அவர்களிடம் எப்போதும் சொல்வது ஒன்றுதான்.. யாரும் நம்மை விடக் குறைவானவர்கள் இல்லை. கடவுளால் நாம் இந்தவொரு நல்ல நிலையை அடைந்துள்ளோம் என்று சொல்வேன்.
புரிய வைக்க வேண்டும்: இந்தியாவில் அதிலும் குறிப்பாகப் பணக்கார குடும்பங்களில் தங்கள் கழிப்பறைகளை தாங்களே சுத்தம் செய்வது ஏதோ செய்யவே கூடாத ஒன்றைப் போலவே பார்க்கிறார்கள். நாம் ஆணவ உணர்வோடு இருக்கக் கூடாது. எனவே, முடிந்தவரை, நாம் சமூகத்திற்கு நியாயமாக இருக்க முயற்சி செய்கிறோம். நாம் அனைவரும் சமம்.. நமக்கான வேலைகளை நாம் தான் செய்ய வேண்டும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
78 வயதான நராயண மூர்த்தி அரசியல் கட்சி ஒன்றில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதற்கும் அவர் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு வயதாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். எனக்கு இப்போது 78 வயதாகிறது.. இப்போது என்னால் அரசியலில் எல்லாம் இறங்க முடியாது" என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
தனது வருங்கால திட்டம் குறித்து விளக்கிய அவர், "இப்போது நான் எனது குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடத் திட்டமிட்டுள்ளேன்.. பொறுமையாக இசையை ரசிக்கவும், இயற்பியல் முதல் பொருளாதாரம் வரை பிடித்த விஷயங்களைப் படிக்கவும் திட்டமிட்டுள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications