ஜாமியா துப்பாக்கி சூடு.. கை கட்டி வேடிக்கை.. ரத்தத்துடன் பேரிகாடை தாண்டி போலீஸிடம் ஓடிய மாணவர்
Recommended Video
டெல்லி: டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது உதவிக்கு அழைத்தும் போலீஸார் வராததால் அவர்களை நோக்கி ரத்தம் சொட்ட சொட்ட பேரிகாடை தாண்டி காயமடைந்த மாணவர் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் போலீஸார் மீது குற்றம்சாட்டினர். மேலும் உதவிக்கு அழைத்தும் போலீஸார் வராமல் கைக் கட்டி கொண்டு பேரிகார்டுக்கு பின்னால் நின்று கொண்டிருந்ததாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாகியுள்ளது.

துப்பாக்கி
இந்த நிலையில் நேற்று மாலை போராட்ட களத்திற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்தார். அவர் திடீரென வானத்தை நோக்கியும் மாணவர்களை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். இதனால் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

முதுநிலை பட்டதாரி
விசாரணையில் அந்த நபரின் பெயர் ராம் பகத் கோபால் (31) என்றும் அவர் ஜேவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் நாட்டுத் துப்பாக்கியுடன் போராட்டக்களத்திற்கு வந்தார். காயமடைந்த மாணவர் ஜம்மு காஷ்மீரின் தோடாவை சேர்ந்த ஷாதாப். இவர் ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷனில் முதலாம் ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆவார்.

உயிரை காக்க
இந்த நிலையில் காயமடைந்த மாணவரை போலீஸார் காப்பாற்ற முன் வரவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தனது உயிரை காத்துக் கொள்ள பேரிகார்ட்டை தாண்டி போலீஸார் இருக்கும் பகுதிக்கு காயமடைந்த மாணவர் ஷாதாப் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையில் புல்லட் பாய்ந்தது
இதுகுறித்து மாணவி ஒருவர் கூறுகையில் எனது நண்பர் ஷாதாப் பரூக்கிற்கு இடது கையில் புல்லட் பாய்ந்தது. இதனால் கையில் ரத்தம் கொட்டியது. அப்போது போலீஸாரை உதவிக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரோ சுட்டுவிட்டு எந்த வித பதற்றமும் இல்லாமல் பயமும் இல்லாமல் கூலாக நடந்து சென்றார்.

வேடிக்கை பார்த்த போலீஸ்
இதையடுத்து ஷாதாபை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம். அப்போது மீண்டும் அந்த நபருக்கு பயந்து கொண்டு போலீஸ் பாதுகாப்பிற்காக ஷாதாப் பேரிகார்டு மேல் ஏறி சென்றார். போலீஸார் எங்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதில்லை என்றார். இதுகுறித்து மற்ற மாணவர்களிடம் கேட்ட போது அந்த நபர் எங்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளார். அவர் உள்ளே நுழைந்ததும் டெல்லி போலீஸாருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார் என்றது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த சம்பவத்தை போலீஸார் மறுத்தனர். நாங்கள்தான் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications