‘மெயின்’ வழக்கு தீர்ப்புக்கு பாதை காட்டிய இடையீட்டு மனு உத்தரவு.. அப்பவே உறுதியான எடப்பாடி வெற்றி!
அதிமுக பொதுக்குழுவை அங்கீகரித்து இன்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, இடையீட்டு மனு தீர்ப்பே பாதையாக அமைந்துள்ளது.
டெல்லி : ஜூலை 11ஆம் தேதி ஈபிஎஸ் அணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. சமீபத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான உத்தரவில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழுவுக்கு அதிகாரம் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தீர்ப்பு, பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஈபிஎஸ் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால், அதில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் தமது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இடைக்கால ஏற்பாடு ஒன்றை செய்தது.

ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுத்து அதனை தேர்தல் ஆணையத்திற்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரம் இந்த உத்தரவு இடைக்கால ஏற்பாடு மட்டுமே என்றும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பில் இந்த உத்தரவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த இடையீட்டு மனு மீதான உத்தரவிலேயே, பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளித்ததால், பிரதான வழக்கு தீர்ப்பிலும் இதுவே எதிரொலிக்கும் என ஈபிஎஸ் தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில், அதுவே உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications