வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட்... பின்னணியில் தீய நோக்கம்... ஜெய்ஷங்கர் விளக்கம்
டெல்லி : விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்களின் பின்னணியில் தீய நோக்கம் போன்ற ஏதோ உள்ளது தெரிய வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்வதேச பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசின் இன்டர்நெட் முடக்கத்தை கண்டித்தும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்களின் கருத்தின் பின்னணியில் தீய நோக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால் அதில் தலையிட வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
சுவீடன் இயற்கை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் ட்விட்டரில் பகிர்ந்து, பின் நீக்கிய டூல்கிட் மூலம் இது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய விவசாயிகளின் போராட்டம் பல விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளது. இன்னும் என்னவெல்லாம் வெளியே வர போகிறது னெ்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
அதிகம் தெரியாத ஒரு விஷயம் பற்றி வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் கூறிய கருத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட காரணங்கள் உள்ளன என்றார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட டூல்கிட் உருவாக்கத்தின் பின்னணியில் கலிஸ்தான் இருப்பதாக டெல்லி போலீஸ் பதிந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் சமூக, கலாச்சார, பொருளாதாரத்திற்கு எதிரான போர் எனவும் டூல்கிட் தொடர்பான புகாரிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் டெல்லி போலீஸ் பதிவு செய்த வழக்கில் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications