ரெட் கார்னர் நோட்டீஸ்! வெளிநாட்டில் பதுங்கிய நபர் நாடுகடத்தல்! ஏர்போர்ட்டிலேயே தூக்கிய சென்னை போலீஸ்
டெல்லி: நமது நாட்டில் குற்றம் செய்துவிட்டுத் தப்பியோடிய இரு குற்றவாளிகள் இன்டர்போல் ரெட் நோட்டீஸை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தனித்தனி வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர்.
கிரிமினல்கள் பொதுவாக ஒரு நாட்டில் குற்றம் செய்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்குச் சென்று பதுங்கிவிடுவார்கள். நமது நாட்டிலும் இதுபோல குற்றம் செய்துவிட்டு பலர் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர்.

அவர்களை அழைத்து வர சிபிஐ மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் சிபிஐ கோரிக்கையை ஏற்று ரெட் கார்னர் நோட்டீஸ் தரப்பட்ட இருவர் வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் கார்னர் நோட்டீஸ்:
முதலீட்டாளர்களின் பணம் ரூ.87 கோடியைத் தனது போன்சி திட்டத்தின் மூலம் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜனார்த்தனன் சுந்தரம்.. தமிழகத்தைச் சேர்ந்த இவர் குற்ற வழக்கில் சிக்கியவுடன் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டார். இதற்கிடையே இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸை தொடர்ந்து அவர் பாங்காக்கில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கொல்கத்தா வந்திறங்கிய சுந்தரத்தை கொல்கத்தா ஏர்போர்ட்டில் வைத்தே தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கிரிமினல் சதி, ஏமாற்றுதல், வைப்புத் தொகை/ வட்டியைத் திருப்பிச் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு போலீஸின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அவரை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக போலீசாரின் கோரிக்கையின் பேரில் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்குமாறு இன்டர்போலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவு:
தலைமறைவாக இருந்த அவர் 2025 ஜனவரி 28ம் தேதி பாங்காக் சென்றார். அப்போது ரெட் கார்னர் நோட்டீஸ் காரணமாக அவருக்குத் தாய்லாந்தில் அனுமதி மறுக்கப்பட்டது . இதையடுத்து அவர் பாங்காக்கில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டார். நேற்று புதன்கிழமை கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல மோசடி மற்றும் குற்றச் சதி வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த வீரேந்திரபாய் மணிபாய் படேலும் கைது செய்யப்பட்டார். 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ரூ.77 கோடி மோசடி வழக்கில் சரோடார் நாக்ரிக் சககாரி வங்கியின் இயக்குநர் வீரேந்திரபாய் மணிபாய் படேல் தேடப்பட்டு வந்தார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்:
கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நிலையில், ரெட் கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் அகமதாபாத் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து அவரையும் குஜராத் போலீசார் கைது செய்தனர்.
இன்டர்போல்:
சர்வதேச சட்ட ஒழுங்கு அமைப்புகளுடன் இணைந்து குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா சார்பில் யாருக்காவது நோட்டீஸ் தர வேண்டும் என்றால் சிபிஐ மூலமாகவே கோரிக்கை விடுக்க முடியும். நேரடியாக மாநில போலீசாரால் கோரிக்கை விடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications