ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

அதேநேரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு டெல்லி திகார் சிறையிலேயே கைது செய்தது. இவ்வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம், மேல்முறையீடு செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றமும் ப. சிதம்பரத்தின் மனுவை நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார்.

இதற்கு அமலாக்கப் பிரிவு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் டெல்லி திகார் சிறையில் ப. சிதம்பரத்திடம் மேலும் 2 நாட்கள் விசாரணையையும் நடத்தினர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்.
இந்நிலையில் இன்று ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications