ரூட் மாறுதே! இந்தியாவிடம் உதவி கேட்கும் ஈரான்? மிட்நைட்டில் போனை போட்ட சயீத்! ஜெய்சங்கர் சொன்ன தகவல்
டெல்லி: ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஈரான் வெளிநாட்டுறவு அமைச்சர் சயீத் அப்பாஸ் அராக்சி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஈரானில் உருவாயுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உரையாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் வெளிநாட்டுறவு அமைச்சர் சயீத் அப்பாஸ் அராக்சியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஈரானிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உருவாகி வரும் நிலைமைகள் குறித்து விவாதித்தோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த உரையாடல் நடைபெற்ற நேரத்தில், ஈரானில் நிலவும் சூழல் மிகவும் கவலைக்கிடமானதாக மாறியுள்ளது. அயத்துல்லா கமேனி தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் 20-வது நாளை எட்டியுள்ளன.

ஈரான் அரசியல் பதற்றம்
இரட்டை இலக்க பணவீக்கம், ஈரான் நாணயத்தின் தொடர் மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பொருளாதார காரணங்களால் மக்கள் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கியுள்ளனர். நாடு முழுவதும் 280-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற மோதல்களில் இதுவரை சுமார் 2,500 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரான் முழுவதும் அசாதாரண நிலை உருவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் இந்திய உறவு
ஈரானில் உள்ள இந்திய தூதரகம், மாணவர்கள், யாத்திரிகர்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. வர்த்தக விமானங்கள் உள்ளிட்ட வழிகளை பயன்படுத்தி நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் உள்ளிட்ட பயண ஆவணங்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர் அபாயம்
போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், உள்ளூர் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை கவனிக்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியினரும், வெளிநாட்டு இந்தியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், ஈரானில் சிக்கித் தவிக்கும் காஷ்மீர் மாணவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் வலியுறுத்தியுள்ளது.
ஜெய்சங்கர் - அராக்சி பேச்சு
ஈரானில் நிலவும் இந்த அரசியல் குழப்பம், சர்வதேச அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் தங்கள் நிறுவனங்களை கைப்பற்ற வேண்டும் என்றும், பின்வாங்க வேண்டாம் என்றும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். உதவி வருகிறது என அவர் கூறிய கருத்து, புதிய சர்ச்சைகளையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
ஈரான் அரசியல் பதற்றம்
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படை தளத்தில் இருந்து சில அமெரிக்க ராணுவப் பணியாளர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு, ஈரானின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மேற்கு ஆசியப் பகுதியில் போர் அபாயம் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியா - ஈரான் இடையேயான தூதரக தொடர்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications